வீட்டை விட்டு ஓடி போன பாம்பு.. கண்டுபிடித்து தர கோரி புகார்.. வலைவீசி தேடும் போலீஸ்!
வாஷிங்டன்: வீட்டில் வளர்ந்து வந்த பாம்பு ஒன்று திடீரென வீட்டை விட்டு தப்பி ஓடியதால் வீட்டின் உரிமையாளர் பாம்பை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தற்போது போலீசாரும் தப்பி ஓடிய அந்த பாம்பை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்பெல்லாம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்தித்தாள்களில் வெளியாகும். தற்போது சமூக வலைத்தளங்களிலும் கூட வெளியாகின்றன.
போலீசாருக்கு புகார் அளிக்கும் பட்சத்தில் போலீசாரும் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் காணாமல் போன பொருட்கள் அல்லது நபர்களின் விவரங்களை வெளியிடுவதை நாம் பார்த்திருக்கலாம்.
ஹிஜாப் கூடாதுன்னா? முஸ்லிம் பெண்கள் பிகினி உடை அணிய வேண்டுமா? அசாதுதீன் ஒவைசி ஆவேசம்
நாய், பூனைகள் காணாமல் போனதா..
ஏன் சில சமயங்களில் ஆடு, மாடு காணாமல் போனதாக கூட இப்படி விளம்பரங்கள் வெளியாகி இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் செல்லப்பிராணிகள் கூட காணாமல் போய்விட்டதாக சிலர் கண்ணீர் விட்டு விளம்பரங்கள் வெளியிட்டு இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறோம். நாய், பூனை காணாமல் போய் விட்டதாகவும் அவற்றை மீட்டு கொடுப்பவருக்கு சன்மானம் கொடுப்பதாகவும் அவ்வப்போது வெளியாகும் விளம்பரங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி இருக்கின்றன.
பாம்பை கண்டுபிடித்து தர கோரி போலீசில் புகார்
ஆனால் கனடாவில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பாம்பு தப்பி ஓடிவிட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் சென்று இருக்கிறது. ஆம்.. நீங்கள் படிப்பது சரிதான்.. பாம்பை காணோம் என்று புகார் போயிருப்பது மட்டுமல்ல.. பாம்பை வலை வீசி தேடி வருகிறதாம் அங்குள்ள காவல்துறை.. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஓக் பே என்ற பகுதியில்தான் இந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
வீட்டை விட்டு தப்பி ஓடிய பாம்பு
ஓக் பே பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டில் பாம்பை வளர்த்து வந்திருக்கிறார். அதிக குளிரை தாங்காத ball python- வகை பாம்பு , அதற்கென பிரத்யேக கண்ணாடி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு இருந்து இருக்கிறது. 3 அடி நீளம் உள்ள இந்த பாம்பு மலைப்பாம்பு வகையை சேர்ந்தது ஆகும். ஆப்பிரிக்க நாடுகளின் வனப்பகுதியில் இந்த வகை பாம்புகள் அதிகம் காணப்படும் என்று சொல்லப்படுகிறது.
போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
அதிக குளிரை தாங்கிக்கொள்ளாத இந்த பாம்பு எப்படியோ வளர்க்கப்பட்டு வந்த கண்ணாடி கூண்டிற்குள் இருந்து நழுவி தப்பி ஓடிவிட்டதாம். இதை கவனித்த பாம்பை வளர்த்து வந்தவர் அதிர்ச்சி அடைந்து வீடு முழுக்க தேடியிருக்கிறார். எங்கும் கண்டுபிடிக்க முடியாததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசாரும் விரைந்து வந்து பக்கத்து வீடுகள் அருகில் உள்ள புதர்கள் என அனைத்து இடங்களிலும் தேடி தேடி சளைத்து விட்டனர்.
பாம்பின் அங்க அடையாளங்கள்
ஆனால், பாம்பை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பாம்பு பற்றிய விவரங்களை போலீசார் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த பாம்பு சுமார் 3 பவுண்டுகள் (1.36 கி,கி) எடை கொண்டது என்று தெரிவித்துள்ளனர். விஷத்தன்மை இல்லாத இந்த பாம்பு சமீபத்தில்தான் உணவு உட்கொண்டதாகவும் அதற்கு கூர்மையான பற்கள் எதுவும் கிடையாது என்றும் போலீசார் பதிவில் தெரிவித்துள்ளனர்.
வலைவீசி தான் பிடிப்பார்கள் போல..
வழக்கமாக போலீசார் குற்றவாளிகளை தேடும் போது வலை வீசி தேடுவதாக சொல்லப்படுவது உண்டு. இப்போது உண்மையிலேயே வலை வீசித்தான் இந்த பாம்பை போலீசார் கண்டு பிடிக்க வேண்டியிருக்கும் போல் தெரிகிறது.