அல்கொய்தா ஆட்டம் ஆரம்பம்.. 2 ஆண்டுகளில் அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல்.. வெளியான பகீர் தகவல்
வாஷிங்டன்: அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆப்கனில் மீண்டும் தன்னை வளர்த்துக் கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்தன. இந்த காலகட்டத்தில் ஆப்கனில் இருந்து பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டனர், அதேபோல தாலிபான் ஆட்சியும் வீழ்த்தப்பட்டது.
அதேநேரம் கடந்த சில வாரங்களுக்கு முன், ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கின. அப்போதே தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

தாலிபான் ஆட்சி
ஆனால், யாருமே தாலிபான்கள் இந்தளவுக்கு வலுவாக இருப்பார்கள் என நினைத்திருக்கவில்லை. இதனால் தான் வெறும் சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் தாலிபான்களால் கொண்டு வர முடிந்தது. முதலில் எல்லைகள், அடுத்து ஊர் பகுதிகள், இறுதியாக நகரங்கள் என ஸ்கெட்ச் போட்டுத் தாக்குதல் நடத்திய தாலிபான்களின் கைவசம் மளமளவென அனைத்து பகுதிகளும் விழுந்தது. பல இடங்களில் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கன் ராணுவம் போராடவில்லை என்றும் கூறப்படுகிறது.

தாலிபான்கள் உறுதி
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர். மேலும், பழைய தாலிபான் ஆட்சி போல இது இருக்காது என்றும் பெண்கள் உரிமைகள் இதில் முறையாகப் பாதுகாக்கப்படும் என்றும் தாலிபான்கள் தெரிவித்தனர். மேலும், இந்த முறை பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கப்படாது என்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாலிபான்கள் தெரிவித்தனர். இருப்பினும், அமெரிக்காவின் உளவு அமைப்பின் முக்கிய அதிகாரி இதற்கு நேர்மாறாக ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கா புலனாய்வு அமைப்பு
இது குறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பெரியர் கூறுகையில், "ஆப்கனில் இருக்கும் வெளிநாட்டினரைத் தாயகம் அழைத்துச் செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இதற்காகத் தனியாக ஒரு முன்னுரிமை பட்டியலை ரெடி செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதில் எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

2 ஆண்டுகள் தான்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா மீது அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன" என்றார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், அந்நாட்டின் நாடாளுமன்ற குழுவிடம், அல் கொய்தா ஆப்கானிஸ்தானில் இருந்தவாறே அமெரிக்காவில் தாக்குதல் நடத்தும் திறனை இரண்டு ஆண்டுகளில் வளர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தாலிபான் 1.o
ஆப்கனில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி கடந்த 199- 2001 வரை இருந்தது. அந்த சமயத்தில் பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் இருந்தது. அல்கொய்தா தொடங்கி பல்வேறு பயங்கரவாத குழுக்களும் ஆப்கனில் இருந்து இயங்கினர், அப்போது கடந்த 2001ஆம் ஆண்டு செப். 11ஆம் தேதி அல்கொய்தா அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலில் 2997 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னரே ஆப்கனில் இருக்கும் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. சுமார் 20 ஆண்டுகள் நீண்ட இந்த யுத்தம் இப்போது தான் முடிவுக்கு வந்தது. அதுவும் அமெரிக்கா விரும்பியபடி இல்லை. ஏனென்றால், அமெரிக்கப் படைகள் வெளியேற சில வாரங்களிலேயே அங்கு இப்போது தாலிபான் ஆட்சி அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications