"ஸ்லிப் ஆனா செதறிடுவ.. " வெடித்து சிதறும் எரிமலை.. அருகே நின்று செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிகள்
வாஷிங்டன்: பேராபத்தை உணராமல் வெடித்து சிதறும் எரிமலைக்கு அருகே சென்று சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய தலைமுறையிரை செல்ஃபி மோகம் ஆட்டிப்படைத்து வருகிறது. எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்து, அதை உடனடியாக ஃபேஸ்புக்கிலோ, இன்ஸ்டாகிராமிலோ போடுவதை ஒரு கடமையாகவே இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
அதிலும், அந்த செல்ஃபிகளுக்கு கொஞ்சம் அதிக லைக்ஸ் கிடைத்துவிட்டால் போதும். அவ்வளவுதான். தங்களை தாங்களே செலிபிரிட்டி ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்ளும் அவர்கள், வித்தியாச வித்தியாசமாக செல்ஃபி எடுக்க தொடங்கிவிடுவர். இது சில சமயங்களில் ஆபத்துக்கு வழிவகுத்துவிடும்.
உயிருக்கு உலை வைக்கும் செல்ஃபிகள்
ஆற்றுப்பாலத்தில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞர் சாவு, மலை முகட்டில் இருந்த செல்ஃபி எடுத்த இளம்பெண் சாவு என்பன போன்ற செல்ஃபி விபத்து செய்திகளை தற்போது அடிக்கடி பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், ஓடும் ரயிலுக்கு அருகே நின்று செல்ஃபி எடுக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தார். இதுபோன்ற பல விபரீதங்கள் செஃல்பியால் அரங்கேறியுள்ளன. ஆனால் இதுகுறித்து எத்தனை முறை சொன்னாலும் இளைஞர்கள் அதை சட்டை செய்வதில்லை.
எரிமலைக்கு அருகே செல்ஃபி
இந்நிலையில், இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அது எந்த இடம் என்பது எங்கும் குறிப்பிடவில்லை. அமெரிக்காவாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அந்த வீடியோவில், எரிமலை ஒன்று பெரும் கர்ஜனையுடன் வெடிக்க தொடங்குகிறது. அதனுள்ளே இருக்கும் லாவா குழம்புகள் தீப்பிழம்புகளாக வெடித்து சிதறுகிறது. அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் சிலர், அந்த மலைக்கு அருகே நின்று செல்ஃபி எடுக்கின்றனர். பின்னர் வெடிப்பு அதிகமானதும் அவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடுகின்றனர்.
கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
எரிமலை அருகே செல்ல வேண்டாம் என பல முறை சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கமும், அதிகாரிகளும் கூறினாலும் பல சுற்றுலா பயணிகள் இதை கண்டுகொள்வதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம்தான் இந்த வீடியோ. இந்நிலையில், இந்த வீடியோ பார்த்த லட்சக்கணக்கானோர் அந்த சுற்றுலா பயணிகளை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். பொதுவாக, எரிமலை வெடிப்பில் வெளியேறும் லாவா குழம்புகள் 800 முதல் 1,200 டிகிரி சென்டிகிரேடாக இருக்கும். அதாவது ஒரு கெட்டியான இரும்பை சில நொடிகளிலேயே பஸ்பம் ஆக்கிவிடும் வெப்பநிலையை கொண்டது. "இத்தனை ஆபத்தான இடத்தில் செல்ஃபி எடுப்பதுதான் இப்போது ரொம்ப முக்கியமா?" என நெட்டிசன்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
மரணத்தின் வாசலுக்கு சென்றவர்..
இதேபோல, கடந்த ஜுலை மாதம், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது நேபிள்ஸ் நகரில் உள்ள வேஸ்விாயஸ் எரிமலையை அவர் பார்வையிட்டார். அப்போது எந்நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்பதால் அதன் அருகே செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளை போலீஸார் எச்சரித்துள்ளனர். ஆனால் எச்சரிக்கையை மீறி மலைக்கு மேல் ஏறிய நபர் அங்கிருந்து செல்ஃபி எடுக்க முயன்றபோது கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்த போலீஸார் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக ஒரு பாறை இடுக்கில் அவர் மாட்டி இருந்தார். பின்னர் போலீஸார் அவரை மீட்டனர்.