பல லட்சம் பேருக்கு பறிபோகிறது வேலை! விட்டுக்கொடுக்க மறுக்கும் டிரம்ப்! அமெரிக்கா மொத்தமாக முடங்கியது
வாஷிங்டன்: அமெரிக்காவில் செலவினங்கள் மசோதாவில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அமெரிக்க அரசு முடங்கிவிட்டது. தற்போதைய சூழலில் இந்த முடக்கம் முடிவுக்கு வருவதற்கு எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதனால் அமெரிக்காவில் மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை நடக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அரசு செலவினங்கள் தொடர்பான மசோதா இன்னும் நிறைவேறவில்லை. அங்கு இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே பெடரல் அரசே இயங்கும். ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசு (US shut down) முடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் அது சீராக வாய்ப்பு இருப்பது போலத் தெரியவில்லை.

அமெரிக்கா முடங்கியது
இதற்கிடையே அமெரிக்க பெடரல் அரசு ஊழியர்கள் மீதான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அடுத்த இரண்டு நாட்களில் தொடங்கும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அத்தியாவசியமற்ற அனைத்து ஊழியர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஆட்குறைப்பு மிகப் பெரியளவில் இருக்கும் என்றே தெரிகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்கா முடங்கியுள்ள நிலையில், இதற்கு அங்குள்ள இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.
செலவினங்கள் மசோதா தொடர்பாக டிரம்ப் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாசிட்டிவ் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய நேரப்படி நேற்று காலை அமெரிக்க அரசு முடங்கியது. இப்போது வரை இரு தரப்பிலும் சமரசம் செய்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.. மேலும் ஷட் டவுன் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அதை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடந்த நிலையில், அதுவும் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது.
பல லட்சம் பேருக்கு வேலை போகும்
இந்த முடக்கம் நீடித்தால் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர் இழப்பும் ஏற்படும். இந்த நிலைக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியே காரணம் என துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "ஜனநாயகக் கட்சியினர் அரசியல் விளையாட்டை விளையாடி வருகிறார்கள். அமெரிக்க மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என உண்மையாகவே அவர்கள் கருதினால் ஷட் டவுனை முடிவுக்குக் கொண்டு வரவே அவர்கள் முயல வேண்டும். இப்படி நடந்து கொள்ளக்கூடாது" என்றார்.
பெடரல் அரசு ஷட் டவுன் ஆகியுள்ளதால் மிகப் பெரியளவில் பணிநீக்கம் நடக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் லீவிட் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "சில இக்கட்டான சூழல்களில் நாம் விரும்பாத காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அப்படியொரு சூழலில் தான் நாம் இருக்கிறோம். மிக பெரியளவில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜனநாயகக் கட்சியினர்தான் எங்களை இந்த நிலைக்குத் தள்ளினர்" என்றார்.
சிக்கல் என்ன
குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்களுக்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்த மானியம் கொடுக்கும் திட்டங்களை நீடிக்க வேண்டும் என்பதே ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை. ஆனால், அது அமெரிக்க மக்களுக்கு அதிகச் செலவையே ஏற்படுத்தும் எனச் சொல்லும் டிரம்ப் தரப்பு, கொரோனா காலச் சிக்கல்களைச் சமாளிக்கவே அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் இனியும் அதைத் தொடர்வதில் அர்த்தம் இல்லை என்கிறது.
மறுபுறம் ஆளும் குடியரசு கட்சியினர் தற்போதுள்ள நிலையிலேயே பெடரல் அரசின் செலவுகள் தொடர வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், இப்போது அரசு மிக அதிகமாகச் செலவழித்து வருவதாகவும் அது தேவையில்லை என்றும் ஜனநாயகக் கட்சியினர் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க செனட் சபையில் 100 எம்பிகள் உள்ளனர். டிரம்ப் கட்சிக்கு 53 எம்பிக்கள் இருக்கிறார்கள். சுயேச்சை இருவரும் டிரம்ப் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதன் மூலம் டிரம்ப் கட்சி ஆதரவு 55ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், செலவினங்கள் மசோதா நிறைவேற 60 எம்பிக்கள் ஆதரவு தேவை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் வாக்குகளும் தேவைப்படுகிறது.
அமெரிக்க பெடரல் அரசு முடங்குவதால் அத்தியாவசியமற்ற ஊழியர்களுக்கு ஊதியமற்ற விடுப்பில் அனுப்பப்படுவார்கள். ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு ஏஜெண்டுகள் மற்றும் ஏடிசி எனப்படும் விமானப் போக்குவரத்துக் கண்ட்ரோலர்கள் என அத்தியாவசிய ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications