இன்னும் நிறைய பேர் செத்தாலும் பரவாயில்லை.. லாக்டவுனை நீக்கியே ஆக வேண்டும்.. டிரம்ப் ஷாக் பேச்சு!
வாஷிங்டன்: கொரோனாவால் அமெரிக்கர்கள் மேலும் பாதிக்கப்பட்டாலும் சரி, இறப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் சரி பொருளாதாரத்தை சரி செய்ய லாக்டவுனை தளர்த்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது. மொத்த பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியது. இங்கு நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சமாக உள்ளது.
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு வாஷிங்டன்னை விட்டு வெளியே வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பீனிக்ஸிற்கு முதல்முறையாக வந்தார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 37 லட்சத்தை தாண்டியது- அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 72,256
பொருளாதாரம்
அங்கு அவர் கூறுகையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள முழு வீச்சில் பணிகள் நடைபெறுகின்றன. அமெரிக்கர்கள் பணிக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பொருளாதாரத்தை சரி செய்ய வேறு வழியில்லை. லாக்டவுனை தளர்த்துவதுதான் சரி.
இயல்பு நிலை
இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படலாம். இன்னும் சிலர் மோசமாக பாதிக்கப்படலாம். இறப்பும் நேரிடலாம். எனினும் நாம் இயல்பு நிலைக்கு திரும்பித்தான் ஆக வேண்டும். போரில் முக்கிய கட்டத்தில் உள்ளது அமெரிக்கா. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவோம். வீடுகளை விட்டு பணிக்கு திரும்பும் அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் தங்களை போராளிகளாக கருதியே வெளியே வர வேண்டும் என "ஊக்கமளித்தார்" டிரம்ப்.
தளர்த்துவது
அது போல் செய்தி நிறுவனத்திற்கு நேற்று மாலை பேட்டி அளித்த டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவை முழுவதும் முடக்கியது என்பது மிகப் பெரிய முடிவாகும். இதுவரை நான் இதை செய்ததே இல்லை. ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வரை ஏராளமானோர் பாதிக்கப்படுவர். எனினும் லாக்டவுனை தளர்த்துவது என்ற முடிவில் நான் உறுதியாக உள்ளேன்.
டிரம்ப் அதிர்ச்சி பேச்சு
தடுப்பு மருந்து விவகாரத்தில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம். விரைவில் நாம் இயல்பு நிலைக்கு திரும்புவோம். அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி பெறுவோம் என நம்புகிறேன் என டிரம்ப் தெரிவித்தார். ஏற்கெனவே பொருளாதாரத்தில் குறி வைத்து லாக்டவுனை செய்யாததால்தான் அமெரிக்காவில் இத்தனை உயிரிழப்புகள், பாதிப்புகள் என விமர்சனங்கள் எழுந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்கர்களின் உயிரையும் பணயம் வைக்க டிரம்ப் தயாராகிவிட்டதாகவே அவரது பேச்சு உள்ளது.