சீனாவை தண்டிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து.. உய்குர் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்காக அதிரடி
வாஷிங்டன்: உய்குர் முஸ்லிம்கள், மற்றும் பிற இன சிறுபான்மையினர் மீதான ஒடுக்குதலுக்காக சீனாவை தண்டிக்க விரும்பும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த மசோதாவில் சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற இனக்குழுக்களை பெருமளவில் கண்காணித்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்ற செயல்களில் சம்பந்தப்பட்ட சீன அதிகாரிகள் மீது தடைகள் விதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
சீனாவின் சின்ஜியாங்கில் வன்முறை தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதாக கூறி கடுமையான நிபந்தனைகளின் கீழ் 10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர்கள், கசாக் மற்றும் கிர்கிஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் இன மக்களை தடுப்புக்காவல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும் சட்டவிரோதமாக மக்களை தடுப்பு காவலில் அடைத்து சித்ரவதை செய்யப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
ரயில்வே, தொலைதொடர்பு சேவையில் சீன நிறுவனங்கள் புறக்கணிப்பு.. பதிலடியை ஆரம்பித்தது இந்தியா
அமெரிக்கா குரல்
இந்த விவகாரத்தில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. தங்கள் நாட்டின் இறையாண்மையில் அமெரிக்கா தேவையின்றி மூக்கை நுழைப்பதாக சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் எதிர்ப்புகளை மீறி, உய்குர்கள் உள்பட தடுப்பு காவலில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்காக அமெரிக்கா குரல் எழுப்பி வருகிறது.
சீனாவிற்கு அழுத்தம்
அமெரிக்க நாடாளுமன்ற எம்பிக்கள் உய்குரு முஸ்லிம் அமைப்பினரை சட்டவிரோதமான தடுப்பு காவலில் அடைத்து வைத்திருக்கும் சீனாவிற்கு அழுத்தம் தர விரும்பினார்கள். இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உய்குரு முஸ்லிம்களை தடுப்பு காவலில் அடைத்து வைக்கும் சீனாவை தண்டிக்கும் சட்டம் சிறிய எதிர்ப்புகளுடன் நிறைவேற்றப்பட்டது.
சீனாவை தண்டிக்க முடியும்
இந்த சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஹவாயிற்கு சென்று இருந்ததால் எந்த விழாவும் இன்றி டிரம்ப் கையெழுத்திட்டார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சீனாவில் நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்காக அந்நாட்டு அதிகாரிகளுக்கு தடை விதிக்க முடியும். அத்துடன் சீனாவை தண்டிக்கும் வகையில் பொருளாதார தடை விதிக்க முடியும்.
அமெரிக்காவிற்கு கண்டனம்
இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு சீனா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் உய்குர் முஸ்லிம்களை ஒடுக்குவதை கண்டித்து சீனாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் எந்தவொரு பதில்களின் விளைவுகளையும் அமெரிக்கா ஏற்க வேண்டும், மேலும் சீனாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
Recommended Video
சிறந்த நாள்
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 2020 ஆம் ஆண்டின் உய்குர் மனித உரிமைகள் கொள்கை சட்டம் "மனித உரிமை மீறல்களைச் செய்பவர்களை" பொறுப்பேற்க வைக்கும், ஆனால் சட்டத்தின் ஒரு பிரிவு சில பொருளாதாரத் தடைகளை நிறுத்த நிர்வாக அதிகாரத்தில் தலையிடும் என்றும் கூறியுள்ளார். உய்குர் உரிமை வழக்கறிஞரும், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினருமான நூரி துர்கெல் அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்தார். "இது அமெரிக்காவிற்கும் உய்குர் மக்களுக்கும் ஒரு சிறந்த நாள்" என்று அவர் எழுதி உள்ளார்.