மக்களுக்கு நிறையப் பணம் தரனும்... போகும் முன் வாரி வழங்கும் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு வழங்கப்படவுள்ள கொரோனா பாதிப்பு நிதி குறைவாக உள்ளதாகவும் அதை அதிகப்படுத்தினால் மட்டுமே அதில் கையெழுத்திடுவேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கொரோனாவால் அங்கு பல்வேறு தொழில்களும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊக்கத் தொகை அறிவித்தார்.
அதேபோல, தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு 832 பில்லியின் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டு, அதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், "அவர்கள் இப்போது எனக்கு அனுப்பியுள்ள மசோதா நான் எதிர்பார்த்ததை விட மிகவும் வித்தியாசமானது. இந்த மசோதா உண்மையில் நம் நாட்டிற்கு ஒரு அவமானம்.
தனிநபருக்குக் குறைந்த 600 டாலர் வழங்கப்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு. தனிநபருக்கு 2,000 டாலர் மற்றும் தம்பதிக்கு, 4,000 டாலர் என இதை உடனடியாக அதிகரிக்க வேண்டும். மற்ற நாடுகளில் இருக்கும் அமைப்புகளுக்கு அதிக நிதி அளிக்கும்போது அமெரிக்கர்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்.
அதிபர் பதவியிலிருந்து கிளம்பும் டிரம்ப்.. போகும் முன் பிரதமர் மோடிக்கு ஒரு விருது கொடுத்து அசத்தல்!
இந்த சட்டத்திலிருக்கும் வீணான மற்றும் தேவையற்ற விஷயங்களை உடனடியாக நீக்கிவிட்டு, பொருத்தமான மசோதாவை எனக்கு அனுப்புங்கள். இல்லையெனில் அடுத்த வரும் அரசு தான் கொரோனா ஊக்குவிப்பு திட்டத்தை வழங்க வேண்டும். யாருக்குத் தெரியும் அடுத்த அமையும் அரசும் என்னுடையதாக இருக்கலாம்" என்றார்.