அமெரிக்க அதிபர் டிரம்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி இன்று மீட்டிங்.. என்ன நடக்கிறது?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இன்று சந்திக்க உள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதியை அமெரிக்க அதிபர் சந்திக்க இருப்பது சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஈரான் - இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இந்தியா அடித்த அடியை தாங்க முடியாத பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.

அமெரிக்க பயணம்
இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நான் தலையிட்டே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதனை இந்தியா மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில்தான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்காவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் கடந்த 14 ஆம் தேதி ராணுவ ஆண்டு விழா நடைபெற்றது.
டிரம்ப் - பாகிஸ்தான் தளபதி சந்திப்பு
இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. இதை வெள்ளை மாளிகை மறுத்தது. இந்த நிலையில், தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாஷிங்டன் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு டிரம்புடன் மதிய உணவு விருந்தில் பங்கேற்கும் அசிம் முனிர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவு செயலர் மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஆகியோரை முனிர் சந்தித்து பேச உள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் டிரம்ப்பின் நிலைப்பாடு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இன்று பாகிஸ்தான் ராணுவ தளபதியுடனான அவருடைய சந்திப்பை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. டிரம்பின் இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானுடன் அவர் நெருக்கமான உறவை பேணுவதை காட்டும் வகையில் அமைந்து இருப்பதாக சர்வதேச நோக்கர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
ஏன் முக்கியத்துவம்?
ஈரான் - இஸ்ரேல் மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈரான், யுத்தம் தொடங்கிவிட்டதாக கூறி இஸ்ரேல் மீது தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை டிரம்ப் சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏனெனில், ஈரானுடன் பாகிஸ்தான் நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. எனவே, புவி சார் அரசியல் ரீதியாக பாகிஸ்தான் மிக முக்கிய இடமாக அமெரிக்காவுக்கு பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த போரில் அமெரிக்கா நேரடியாக இறங்கினால், பாகிஸ்தானின் ஆதரவு அமெரிக்காவிற்கு தேவை.
உணவு, எண்ணெய் தட்டுப்பாட்டு
பாகிஸ்தான் தற்போது ஈரான் உடனான நிலம் மற்றும் வான் எல்லையை மூடியுள்ளது. இதனால், எல்லையின் இருப்பக்கமும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானுடன் பாகிஸ்தான் பல்வேறு தரைவழி எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எல்லையாக பலுசிஸ்தானின் குவாதர் மாவட்டத்தில் உள்ள காப்ட்-ரிம்தான் எல்லை மற்றும் சாகி மாவட்டத்தில் உள்ள தஃப்தான் எல்லை ஆகியவை உள்ளன.
தற்போது இந்த எல்லையை மூடியிருப்பதால், பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உணவு மற்றும் எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு வழி ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் பலவும் அடிக்கடி ஈரானில் இருந்து கடத்தப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் முதலில் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் ராணுவ மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக அமைந்து இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் பாகிஸ்தானிய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். ஆசிம் முனிருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் நுழைய முயன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்க செல்வது இது முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications