அமெரிக்கா வன்முறை...காயமடைந்த போலீஸ் அதிகாரி உயிரிழப்பு....பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
வாஷிங்டன்: நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையில் காயம் அடைந்த மேலும் ஒரு போலீஸ் அதிகாரி இறந்து விட்டார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த வன்முறை செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வன்முறையை தொடர்ந்து அமெரிக்கா கேபிடல் காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சுண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

டிரம்ப் பிடிவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். ஆனால் டொனால்ட் டிரம்ப் , இந்த வெற்றியை ஏற்கவில்லை. தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம்சாட்டி அவரும், அவரது ஆதரவாளர்களும் போட்ட வழக்குகள் கோர்ட்டுகளில் செல்லுபடியாகவில்லை.

கடும் வன்முறை
ஜோ பிடன் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் கடும் மோதல் மூண்டது. இந்த வன்முறையில் 4 பேர் இறந்தனர்.

பலி 5 ஆக உயர்வு
முன் எப்போதும் இல்லாத அளவில் நடந்த வன்முறை உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வன்முறை சம்பவத்தில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.இதனால் இந்த வன்முறைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
போலீஸ் அதிகாரி பிரையன் டி.சிக்னிக் புதன்கிழமை நடந்த வன்முறையில் படுகாயம் அடைந்தார். இதனால் அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்பபடி வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் பிரையன் டி.சிக்னிக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். சிக்னிக் ஜூலை 2008 -ல் யு.எஸ்.சி.பி-யில் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறைத் தலைவர் ராஜினாமா
இந்த நிலையில் வன்முறையை தொடர்ந்து அமெரிக்கா கேபிடல் காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சுண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையை கேபிடல் போலீஸ் தடுக்க தவறியதற்காக ஸ்டீவன் சுண்ட் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மரியாதை அளித்தது
கேபிடல் போலீஸ் வாரியம் மற்றும் கேபிடல் காவல்துறையின் ஆண்கள் மற்றும் பெண்களுடன் இணைந்து பணியாற்தியது மகிழ்ச்சியையும், உண்மையான மரியாதையையும் அளித்தது என்று ஸ்டீவன் சுண்ட் கேபிடல் போலீஸ் போர்டுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். இந்த வாரியத்தின் மற்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுகிறார்கள்.












Click it and Unblock the Notifications