சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா.. மசூத் அசாருக்கு எதிரான வரைவு தீர்மானம் ஐ.நா.வில் தாக்கல்
Recommended Video
வாஷிங்டன்: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா நீண்டகாலமாகவே முயற்சி எடுத்தபடி உள்ளது. அண்மையில், நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்துடன் இணைந்து, இதற்கான தீர்மானத்தை பிரான்ஸ் கொண்டு வந்தது.
ஆனால், இதுகுறித்து பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரியது சீனா. இதனால் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்கும் வரைவு தீர்மானத்தை நேரடியாகவே ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில்லுக்கு நேற்று அமெரிக்கா அனுப்பி இருக்கிறது.
இந்த தீர்மானம் நிறைவேறினால் மசூத் அசாருக்கு எதிராக ஆயுத தடை, பயண தடை விதிக்கப்படுவதோடு அவரது சொத்துக்களும் முடக்கப்படும்.
இதுதாங்க சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.. மோடி பற்றி கர்நாடக முதல்வர் கடும் விமர்சனம்
அதேநேரம், அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுமா அல்லது நேரடியாக நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், சீனா தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை முறியடித்துவிடும் வாய்ப்பு உள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்துடன் வீட்டோ அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.