ஏவுகணை மழை.. கடும் கோபத்தில் ரஷ்யா.. பெரிதாகும் சண்டை? உக்ரைனுக்கு உதவ தயாராகும் அமெரிக்கா
வாஷிங்டன்: உக்ரைன் தாக்குதலில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டதால் ரஷ்யா கடும் கோபம் அடைந்துள்ளது. இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை முழு வீச்சில் முன்னெடுக்க ரஷ்யா முனைப்பு காட்டும் என்பதால் ஆயுத உதவி வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்து தற்போது தனி நாடாக இருக்கும் உக்ரைன் திட்டமிட்டது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவது நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எண்ணிய ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. ஏறத்தாழ ஒரு வருடத்தை நெருங்கி விட்ட போதிலும் போர் தற்போது வரை நீடித்து வருகிறது.
உக்ரைன் யுத்தத்தை நிறுத்த விரும்பும் ரஷ்யா.. தைவானை ஆக்கிரமிக்க 39 போர் விமானங்களை பறக்கவிட்ட சீனா
தொடர்ந்து நீடிக்கும் போர்
உக்ரைன் - ரஷ்யா இடையேயான சண்டையில் ரஷ்யாவின் கையே ஒங்கி இருந்தாலும் உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், ரஷ்யாவுக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனின் சில இடங்களை கைப்பற்றுவதும் பின்னர் அதை உக்ரைன் மீட்டெடுப்பதும் என போர் தொடர்ந்து கொண்டே வருகிறது. வலிமையான ராணுவ கட்டமைப்பை கொண்ட ரஷ்யாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
ஆயுத உதவிகள்
அமெரிக்காவும் ஏராளமான நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகிறது. ரஷ்யா மீது பொருளாதார நெருக்கடியை விதித்து பொருளாதார ரீதியாகவும் அந்த நாட்டை நிலை குலைய அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அதேபோல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக போரில் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இன்னும் ஒரு சில வாரங்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு ஆண்டு வந்து விடும்.
ரஷ்யா மீது ஏவுகணை மழை
ஆனால், இரு தரப்பும் தீவிரமாக தற்போது சண்டையிட்டுக்கொள்வதால் தற்போதைக்கு போர் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. குறிப்பாக ரஷ்ய வீரர்கள் தங்கியிருந்த கல்லூரி கட்டிடங்கள் மீது உக்ரைன் ஏவுகணை மழை பொழிந்தது. உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணம் மக்கிவ்கா நகரத்தில் தொடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தங்கள் தரப்பில் 89 வீரர்கள் பலியானதாக ரஷ்யா முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்தது.
கோபத்தில் ரஷ்யா
புத்தாண்டை ஒட்டி ரஷ்ய வீரர்கள் செல்போன் பயன்படுத்தியதால் அந்த சிக்னல்களை வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தி விட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ரஷ்ய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதலை முன்னெடுக்கும் என்பதால் தங்களுக்கு கூடுதல் ஆயுதங்கள் வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து இருந்தார்.
ஆமாம் என்று பதிலளித்த ஜோ பைடன்
இந்த நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி வழங்கும் வகையில் பெரிய கவச வாகனங்கள் அனுப்பும் திட்டம் அமெரிக்காவின் பரிசீலனையில் உள்ளதா? என்று ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேள்வி முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த ஜோ பைடன், "ஆமாம்" என்று மட்டும் பதிலளித்தார். ஆனால், இது குறித்து விரிவாக வேறு எதையும் ஜோ பைடன் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே 2 ஆயிரம் போர் வாகனங்கள்
பிரேட்லி என்ற கவச வாகனம் அதி நவீன பாதுகாப்பு அம்சங்களையும் தாக்குதல் திறனையும் கொண்டது ஆகும். வீரர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதோடு இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 25 மில்லி மீட்டர் பீரங்கி மற்றும் எதிரிகளின் ஆயுதங்களை அழிக்கும் வகையிலான ஏவுகணைகளையும் கொண்டது. ராணுவ டாங்கி வாகனங்களை விட வேகமாக செல்லக்கூடியது. இந்த கவச வாகனத்தில் 10 வீரர்கள் வரை செல்ல முடியும். உக்ரைனுக்கு ஏற்கனவே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர் வாகனங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.