கொரோனாவுக்கு அமெரிக்க எம்.பி. உயிரிழப்பு...3 நாளில் பதவியேற்க இருந்த நிலையில் சோகம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான லூக் லெட்லோ, கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார்.
லூக் லெட்லோ மறைவுக்கு லூசியானா மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெல்லோசி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்தவர் லூக் லெட்லோ(வயது 41). இவர் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில், லூசியானா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானார். வரும் ஞாயிறு அன்று எம்.பி.யாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி லூக் லெட்லோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 23-ம் தேதி உடல்நிலை மோசம் அடைந்ததால் லூக் லெட்லோ அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். லூக் லெட்லோ மறைவுக்கு லூசியானா மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், லூக் லெட்லோ தனது சொந்த மாநில மக்களுக்கு சேவை செய்ய சிறு வயதிலிருந்தே சேவை செய்தார். முன்னாள் ஆளுநர் பாபி ஜிண்டாலுக்கு திரைக்குப் பின்னால் பணியாற்றினார் என்று கூறினார்.
பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெல்லோசி வெளியிட்ட அறிக்கையில், லூக் லெட்லோ பொது சேவைக்காக தன்னை அர்ப்பணித்தார். அவரது மறைவால் துயரம் அடைகிறோம் என்று தெரிவித்தார்.