"தலை தப்பியது.." ஒட்டுமொத்த அமெரிக்காவும் முடங்கும் அபாயம்.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன! எஸ்கேப்
வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டிருந்த நிலையில், அது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. அந்த கடைசி 3 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்,
பொதுவாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகம் பவர்ஃபுல்லானது. அங்கே பல முக்கிய முடிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் மட்டும் போதாது.. அவற்றை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற விதி இருக்கிறது.

அதன்படி அமெரிக்காவில் அரசு செலவுகள், அதாவது ஊழியர்களுக்கான சம்பளம், ஆய்வு நிதி உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்க அங்கு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட மசோதா மூலம் நவ. இறுதி வரை மட்டுமே அரசுக்கு நிதி அளிக்கும் நிலை இருந்தது.
அமெரிக்கா முடங்கும் அபாயம்: இதற்கிடையே அடுத்து வரும் மாதங்களுக்குத் தேவையான நிதிக்கு ஒப்புதல் தரும் மசோதா அங்கே சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கலானது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவை நிறைவேற விடாமல் அவர்கள் முடக்கினர். இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த மசோதாவை நிறைவேற்றக் கடைசி நாளான நேற்று மதியம் வரை இது நிறைவேற்றப்படவில்லை. இதனால் அமெரிக்கா நிச்சயம் முடங்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்கா ஷட் டவுன் ஆனால், அங்குள்ள 40 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காது. அவர்கள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும். அதாவது அவர்கள் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ஊதியம் கிடைக்காது. தேசிய பூங்கா முதல் ஆய்வுகள் வரை எதற்கும் நிதி கிடைக்காது.
திட்டம்: கடைசி நாள் வரை இந்த மசோதா நிறைவேற எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில், அங்குள்ள முக்கிய ஏஜென்சிகள் ஷட் டவுன் ஆகும் போது என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தைக் கூட போட்டுவிட்டனர். விமான நிலைய ஸ்கிரீனிங், எல்லைக் கண்காணிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இருக்கும் என அறிவித்தனர். ஆராய்ச்சி தொடங்கி, 70 லட்சம் ஏழைத் தாய்களுக்கான ஊட்டச்சத்து உதவி உட்பட எதெல்லாம் மூடப்படும் என்ற விவரமும் அதில் இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையே கடைசி 3 மணி நேரத்தில் அங்கு நிலை மாறியது. இந்தச் சூழலில் தான் திடீர் திருப்பமாகப் பிரதிநிதிகள் சபை சபாநாயகரும் குடியரசு கட்சியின் பவர்ஃபுல் தலைவர்களில் ஒருவருமான கெவின் மெக்கார்த்தி இந்த மசோதாவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார். இதையடுத்து குடியரசு கட்சியில் இருந்து மேலும் பல எம்பிக்களின ஆதரவாலும் நேற்று கடைசி நேரத்தில் இந்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அக். 1ஆம் தேதிக்குள் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அதிபர் பைடனின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்கு அரசு செலவுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
தொடரும் பிரச்சினை: அமெரிக்காவில் ஒவ்வொரு முறையும் கடன் உச்சவரம்பை உயர்த்துவது போன்ற முக்கிய மசோதாக்கள் வரும் போது இதுபோல நடப்பது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. பொதுவாக அங்குள்ள ஜனநாயக கட்சியினர் அரசு செலவுகளை ஆதரிப்பார்கள்.
அதாவது பெரு நிறுவனங்களுக்கான வட்டியைச் சற்று உயர்த்தி மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், குடியரசு கட்சியினர் அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும்.. வரியை மிகக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள். இதனால் எப்போதும் இரு தரப்பிற்கும் இடையே மோதலே இருக்கும்.












Click it and Unblock the Notifications