இரட்டை கோபுர தாக்குதலில் சவுதிக்கு தொடர்பு? 20ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் ரகசிய ஆவணம்-பைடன் உத்தரவு
வாஷிங்டன்: வரும் செப்டம்பர் 11ஆம் தேதியுடன் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இத்தாக்குதல் குறித்த அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது.
உலக வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர். இதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இரட்டை கோபுர தாக்குதல்
நியூயார்க் நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த இரட்டை கோபுரத்தின் மீது பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதினர். தாக்குதல் நடைபெற்ற செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்கா வரலாற்றில் என்றும் மறக்க முடியாத கறுப்பு நாளாக மாறிப்போனது. இந்தத் தாக்குதலில் சவுதி அரசுக்கும் தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகவே கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அமெரிக்கா எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகச் சவுதி இருந்து வருவதாலேயே இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் அமெரிக்கா வெளியிட மறுப்பதாகவும் பரவலாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன.

ரகசிய ஆவணங்களை வெளியிட உத்தரவு
ஆனால், அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்றதும் நிலைமை மெல்ல மாற தொடங்கியது. செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரம் ஆகியவற்றில் பைடன் சவுதி அரசுக்கு எதிரான முடிவையே எடுத்திருந்தார். இந்நிலையில். இரட்டை கோபுர தாக்குதல் குறித்து இதுவரை பொதுவெளிக்கு வெளியிடப்படாமல் இருந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் இதில் எந்த மாதிரியான தகவல்கள், குறிப்பாக சவுதி அரசுக்கு எதிரான தகவல்கள் இடம்பெற்றிருக்குமா என உறுதியாகத் தெரியவில்லை.

அதிபர் பைடன்
அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த ஆவணங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க வரலாற்றில் மோசமான தாக்குதலான இதில் கொல்லப்பட்ட 2997 அப்பாவி மக்களின் குடும்பங்களின் துக்கத்தை நாம் என்றும் மறக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார். இரட்டை கோபுர தாக்குதலில் கொல்லப்பட்ட குடும்பத்தினர் இந்த ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படைத்தன்மை
அதிபர் பைடன் மேலும் கூறுகையில், "சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் மனதில் இருக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இது பதில் அளிக்கும். இந்த விஷயத்தில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை" என்றார்.

விமானங்கள்
2011 செப்டம்பர் 11ஆம் அமெரிக்காவில் மொத்தம் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டன. அதில் இரண்டு விமானங்கள் இரட்டை கோபுரங்கள் மீது சில நிமிட இடைவெளியில் மோதின. 3ஆவது விமானம் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகனில் மோதியது. 4ஆவது விமானம் பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்த காலியான இடத்தில் விழுந்தது.

புஷ் - பைடன் - ஆப்கன்
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த சமயத்தில் தான் அல்கொய்தா பயங்கரவாதிகள் இந்த இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றது. அந்த சமயத்தில் அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கன் அடைக்கலம் கொடுத்திருந்தது. அதைத் தொடர்ந்தே ஆப்கன் மீது அமெரிக்க படையெடுத்தது. அங்கிருந்த தாலிபான்கள் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. இப்போது அதிபர் பைடன் உத்தரவின் பெயரில் அதே ஆப்கனில் இருந்து தான் அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளது. இந்தச் சூழலில் ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின்லேடனை அமெரிக்காவின் சீல் படைகள் பாகிஸ்தானில் வைத்து 2011 மே 1ஆம் தேதி கொன்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications