"நான் ரெடி!" நேரடியாக களத்திற்கு செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் போரில் அடுத்து என்ன! பரபர பைடன்
வாஷிங்டன்: போர் காரணமாக உக்ரைன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்,
உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் ரஷ்யா முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த போர் காரணமாக இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பறந்து வந்த ஏவுகணை! தீக்கிரையாகி மூழ்கிய ரஷ்ய போர்க் கப்பல்! முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷ்யா!
உக்ரைன் போர்
இந்தப் போர் தொடங்கியது முதல் உலக நாடுகள் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடங்கிப் பல விஷங்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளது. வரும் காலங்களில் பொருளாதாரத் தடைகள் மேலும் கடுமையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தயார்
இந்நிலையில், போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு வரும் காலத்தில் செல்ல தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுப்பப்படுவார்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்த பைடன், "இது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். விரைவில் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்போம்" என்றார். அப்போது நீங்கள் உக்ரைன் செல்வீர்களா என்று செய்தியாளர் கேட்க, "ஆம், தயார்" என்று அவர் பதில் அளித்தார்.
யார் சொல்கிறார்
உக்ரைனுக்கு உயர் அதிகாரிகளை அனுப்புவது தொடர்பாக அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில், இப்போது பைடனே இது குறித்துப் பேசியுள்ளார். உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது என்பதை உலக நாடுகளுக்குக் காட்டும் வகையில் மூத்த அதிகாரியை கீவ் நகருக்கு அனுப்புவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று ஜோ பைடன் கூறியிருந்தார். பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அல்லது வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இருவரில் ஒருவர் உக்ரைன் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
முக்கிய உதவி
முன்னதாக கடந்த புதன்கிழமை உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அதிபர் பைடன் அறிவித்திருந்தார். ரஷ்யா படைகளைச் சமாளிக்க உக்ரைன் நாட்டிற்குக் கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பி அவர், இது உக்ரைன் நாட்டிற்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், "இப்போது இருக்கும் சூழலில் நாம் ஓய்வெடுக்க முடியாது. நான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உறுதியளித்தபடி, சுதந்திரத்திற்கான அவர்களின் போராட்டத்தில் உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா தொடர்ந்து நிற்பார்கள்" என்றார்.
ரஷ்யா
உக்ரைன் போருக்கு உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா மோசமான போரை ஆரம்பித்துள்ளதாகவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாள் ரஷ்யாவில் நடக்கும் மோசமான தாக்குதல் இது என்றும் கூறி வருகின்றனர். அதேநேரம் இதைப் போர் என்று குறிப்பிடவே ரஷ்யா மறுத்து வருகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட சிறப்பு ராணுவ நடவடிக்கை இது என்றே ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.