மியான்மரில் மீண்டும் ராணுவ ஆட்சி... பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என பைடன் எச்சரிக்கை
மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன்: மியான்மரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது 'நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ராணுவ ஆட்சி தொடர்ந்தால் மியான்மர் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுவது ஒன்றும் புதிய விசயமல்ல என்றாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பூத்த ஜனநாயக மலர்கள் மீண்டும் ராணுவத்தின் கால்களில் மிதிபடத் தொடங்கியுள்ளன.
மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆட்சியமைக்க தேவையான 322க்கும் அதிகமான இடங்களில் வென்று மீண்டும் ஜனநாயக தேசிய லீக் ஆட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராணுவம் குற்றம் சாட்டியது.
பொதுத் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக நேற்று நாடாளுமன்றம் கூட இருந்தது. இந்த கூட்டத்தொடரில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சற்றும் எதிர்பாராத திருப்பமாக மியான்மரில் ராணுவப்புரட்சி வெடித்தது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் அதிரடியாக கைது செய்தது.
அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் பிரிவு 417-ன் கீழ் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக ராணுவத்துக்கு சொந்தமான மியாவாடி தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியானது. மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க ஒரு வருட காலத்துக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது.
ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹியாங் நாட்டின் தலைவராக இருப்பார் என்றும், துணை அதிபர் மைன்ட் ஸ்வே அதிபராக உயர்த்தப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. அதேபோல் ஒரு வருடத்துக்குள் மியான்மரில் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றிபெறும் நபரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் உறுதியளித்துள்ளது.
திடீர் ராணுவ புரட்சி காரணமாக மியான்மர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மியான்மர் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு உலக நாடுகளிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது குறித்து கருத்து கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது 'நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல். நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் இது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயக அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதார அபராதங்களை உயர்த்துவதற்கான 2016ஆம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும். ராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மரில் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.