வேக்சின் மட்டும் போட்டிருந்தால் போதும்.. இனி எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.. அமெரிக்கா அதிரடி
வாஷிங்டன்: வெளிநாட்டுப் பயணிகளுக்கு டிரம்ப் ஆட்சியில் விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு டோஸ் வேக்சின் போட்டவர்களுக்கும் RT PCR பரிசோதனை செய்தவர்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளை மிரட்டி வருவது என்றால் அது கொரோனா வைரஸ் தான். உலகின் எந்த நாட்டிலும் வைரஸ் பாதிப்பு முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
சில நாடுகள் மட்டுமே தீவிரமான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

கட்டுப்பாடுகள் நீக்கம்
அதன்படி அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 18 மாதங்களுக்கு முன் டிரம்ப் ஆட்சியில் விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு டோஸ் வேக்சின் போட்டவர்களுக்கும் RT PCR பரிசோதனை செய்தவர்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பைடன் நிர்வாகம்
இது குறித்து பைடன் நிர்வாகத்தின் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப்ரி ஜியண்ட்ஸ் கூறுகையில், "கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதேநேரம் வெளிநாட்டில் இருந்து வருவோரின் நலனைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளோம். அதன்படி இனி அமெரிக்காவுக்கு வரும் அனைவரும் இரண்டு டோஸ் வேக்சின் போட்டிருக்க வேண்டும். அதேபோல அவர்கள் RTPCR பரிசோதனை செய்திருந்தால் அவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

தொடரும் சில கட்டுப்பாடுகள்
முழுமையாக வேக்சின் போடாத வெளிநாட்டினருக்கு அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் எந்த வேக்சினை போட்டிருக்க வேண்டும் என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. அதேநேரம் அமெரிக்கர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் போது அவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து வரும் கார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஜெஃப்ரி ஜியண்ட்ஸ் குறிப்பிட்டார்.

காரணம்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் வரவேற்றுள்ளனர். கொரோனாவுக்கு பிந்தைய பயணத்தின் முதல் படியாக இது இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் நீர்மூழ்கி கப்பலைத் திரும்பப் பெற்ற விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சரி செய்யும் விதமாகவே இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications