"அமெரிக்க டாலருக்கு ஆபத்து.. நரகத்திற்கு போகும்.!" டிரம்பை வெளுத்து வாங்கிய உலகின் டாப் முதலீட்டாளர்
வாஷிங்டன்: உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பெர்க்ஷயர் ஹாத்வே சிஇஓ வாரன் பபெட் அந்நிறுவனத்தின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பெயரைச் சொல்லாமல் கடுமையாக விமர்சித்த வாரன் பபெட், அமெரிக்க டாலர் குறித்தும் தனது கவலைகளை வெளிப்படுத்தினார். இந்தச் சூழல் தொடர்ந்தால் உலக நாடுகள் வேறு கரன்சி நோக்கிச் செல்லவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
உலகின் முக்கிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்று பெர்க்ஷயர் ஹாத்வே. இந்த நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் சிஇஓ வாரன் பபெட் கலந்து கொண்டார். 94 வயதான வாரன் பஃபெட், தனது சிஇஓ பதவியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இந்தக் கூட்டத்தில் அறிவித்தார். அவருக்குப் பதிலாகத் தற்போது துணைத் தலைவராக உள்ள கிரெக் ஏபல் சிஇஓவாக பதவியேற்கிறார்.

வாரன் பபெட்
இந்தக் கூட்டத்தில் டிரம்ப் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் விமர்சித்த வாரன் பஃபெட், அமெரிக்க டாலரின் நீண்டகால நிலைத்தன்மை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், இதே சூழல் தொடர்ந்தால் உலக நாடுகள் வேறு கரன்சி நோக்கியும் சொல்லலாம் என அவர் குறிப்பிட்டார்.
நரகத்திற்குச் செல்லும்
இந்த நிகழ்ச்சியில் வாரன் பஃபெட் மேலும் பேசுகையில், "வெளிப்படையாகச் சொல்கிறேன். ஒரு கரன்சி நரகத்திற்குச் செல்லும் என நாம் கருதினால்.. நிச்சயம் அதை நாம் வைத்திருக்க மாட்டோம்.. அமெரிக்காவில் நடக்கும் சில விஷயங்களைப் பார்த்தால் நாம் வேறு கரன்சிகளை வைத்திருக்க வேண்டுமோ என்று யோசிக்கும் சூழல் ஏற்படலாம். எதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் நாம் மிகப் பெரிய முதலீட்டைச் செய்தால்... அவர்களின் கரன்சிக்கு நாம் நிறைய பைனான்சிங் செய்யும் சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா
தொடர்ந்து அமெரிக்கப் பொருளாதாரம் குறித்துப் பேசிய அவர், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் திறமையின்மை இருப்பதாகக் கூறிய அவர், அதுவும் பிரச்சினையைத் தருவதாகத் தெரிவித்தார். இதுபோன்ற சிக்கல்கள் இருந்தாலும் தனக்கு அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் உலகில் முதலீடு செய்ய மிகச் சிறந்த நாடாக அமெரிக்காவே இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகளைக் கண்காணித்துக் கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் மீது தாக்கு
அதிபர் டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது நிர்வாகத்தை வாரன் பபெட் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக டிரம்ப் நிர்வாகம் வரிகளை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைக் கடுமையாக விமர்சித்தார். வர்த்தகம் ஓர் ஆயுதமாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், வர்த்தகம் மற்றும் வரிகள் வைத்து போரைக் கூட நடத்த முடியும் என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்கா இதுபோல வரிகளை விதித்துள்ளது மோசமான விஷயங்களுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
பகைத்துக்கொள்ளக் கூடாது
தனது நட்பு நாடுகளையும் கூட்டாளிகளையும் அமெரிக்கா பகைத்துக் கொள்ளக்கூடாது என்றும் வாரன் பஃபெட் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நம்மை பிடிக்காத நாடுகள் இருக்கலாம்.. ஆனால், நமது நட்பு நாடுகளை நாம் பகைத்துக் கொள்ளக்கூடாது. அது சரியான அணுகுமுறை இல்லை. அது புத்திசாலித்தனமும் இல்லை.
250 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா எதுவுமே இல்லாத ஒரு நாடாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. இன்று நாம் உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். சர்வதேச அளவில் வெல்கிறோம். இதுபோல வேறு எதுவும் நடந்ததே இல்லை.












Click it and Unblock the Notifications