சர்வதேச அளவில் குறையும் தங்கத்தின் விலை.. இந்தியாவில் மட்டும் தொடர்ந்து உயர்கிறது! ஓ இதுதான் காரணமா
வாஷிங்டன்: உலகின் பல பகுதிகளில் தங்கத்தின் விலை குறைந்து வரும் போதிலும், இந்தியாவில் தங்கத்தின் விலை குறையாமல் இருக்க என்ன காரணம் தெரியுமா! வாங்க பார்க்கலாம்!
உலகில் மதிப்புமிக்க உலோகங்களில் தங்கமும் ஒன்று. ஆபரணங்கள், சேமிப்பு என்று தங்கத்தை நாம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.
பல நேரங்களில் நாம் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும் போது, தங்கமே காக்கும். எந்த நாட்டிற்குச் சென்றாலும் தங்கத்திற்கு எளிமையாக உள்ளூர் ரொக்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு.. பங்களிப்புக்கு இந்தியா தயார்.. உக்ரைன் அதிபரிடம் மோடி உறுதி
தங்கம்
இப்படி பல்வேறு வசதிகள் உள்ளதால், மக்கள் பலரும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி சேமித்து வருகின்றனர். தனி மனிதர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் இதை உணர்ந்தே உள்ளன. இதன் காரணமாக உலகின் பல முக்கிய ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி சேமித்து வருகின்றன. அமெரிக்கா 8,133 டன் தங்கத்தையும், ஜெர்மனி 3,359 டன் தங்கத்தை வைத்து உள்ளன. அதேபோல இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் 754 டன் தங்கம் உள்ளது.
இந்தியா
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36% தங்கத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்து உள்ளது. அதேநேரம் இந்தியாவில் வீடுகளிலும், கோயில்களிலும் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டால், அது பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்திய வீடுகளில் மட்டும் குறைந்தது 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 முதல் 850 டன் தங்கம் தேவைப்படுகிறது. நாட்டின் தங்கத்தின் மீதான காதல் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
மக்கள்
ஆபத்தான காலத்தில் தங்கம் மட்டுமே நம்மைக் காக்கும் என்பதை மக்கள் உணர்ந்து வைத்து இருப்பதால், அவர்கள் தங்கத்தைத் தொடர்ந்து சேமித்து வருகின்றனர். கொரோனா சமயத்தில் சர்வதேச அளவில் பொருளாதாரம் முடங்கியது. இதனால் வழக்கம் போல தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. இப்போது கொரோனா குறைந்து உள்ள நிலையில், பல நாடுகளில் பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விலை பல உலக நாடுகளில் குறைந்து வருகிறது.
விலை
அமெரிக்காவில் இப்போது ஒரு கிராம் 24 கிராட் தங்கத்தின் விலை இப்போது 55 டாலராக (இந்திய மதிப்பில் ரூ. 4,474) உள்ளது. இது கடந்த மாதம் 52 டாலர் (ரூ 4230) வரை சென்றது. துபாயில் இந்திய மதிப்பில் இப்போது 24 கிராட் ஒரு கிராம் தங்கம் ரூ.4,563க்கே விற்பனை செய்யப்படுகிறது. இப்படி பெரும்பாலான நாடுகளில் இந்தியாவைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் இப்போது ஒரு கிராம் தங்கம் 5,210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை 5000க்கு கீழ் கூட செல்லவில்லை. மாறாகக் கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
வரி
உலகின் பெரும்பாலான நாடுகளில் தங்கத்தின் விலை குறைந்து வரும் போதிலும், இந்தியாவில் மட்டும் தங்கத்தின் விலை ஏன் குறையாமல் இருக்கிறது தெரியுமா! இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. முதலாவது வரி. தங்கத்தின் மீதான சுங்க வரி கடந்த ஆண்டு 7.5 சதவீதமாக இருந்தது. இதைக் கடந்த ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு 12.5 சதவீதமாக உயர்த்தியது. இத்துடன் தங்கத்திற்கு 2.5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் விதிக்கப்படுகிறது.
15% வரி
எனவே, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் மீதான மொத்த இறக்குமதி வரி 15 சதவீதமாக உள்ளது. நடப்பு ஆண்டில் நிதிப் பற்றாக்குறையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. தங்கத்தின் விலை இந்தியாவில் உயர இதுவும் ஒரு காரணம்.
ரூபாய் மதிப்பு
மற்றொரு காரணம் இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவு. இந்தியாவில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலர் மற்றும் ரூபாய் விகிதங்களுக்கு ஏற்ப மாறும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இடையில் சில காலம் ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சியால் ரூபாய் மதிப்பு சரிவது சற்றுக் கட்டுக்குள் இருந்தது. அந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை இந்தியாவிலும் சற்று குறைந்தது.
காரணம்
ஆனால், இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.36 டாலராக உள்ளது. இதனால் நாம் தங்கத்தை இறக்குமதி செய்ய அதிகப்படியான ரூபாயைச் செலவிட வேண்டி உள்ளது. சர்வதேச சந்தையில் விலை குறைந்த போதிலும், இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிக்க இதுவும் மற்றொரு முக்கிய காரணமாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.