ஆன்லைன் காதலனை நம்பி 5000 கிமீ பயணித்த பெண்..உடல் உறுப்புக்காக பீஸ் பீஸாக வெட்டி கொல்லப்பட்ட கொடூரம்
வாஷிங்டன்: ஆன்லைன் காதலனை நம்பி 5 ஆயிரம் கி.மீட்டர் பயணித்த பெண், உடல் உறுப்புக்காக கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரு நாட்டில் நடைபெற்றுள்ளது. ஆன்லைன் நட்புகளை கண்மூடித்தனமாக நம்பினால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தொலைத்தொடர்புத்துறையின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று உலகமே ஒரு உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது என்று சொல்லும் அளவுக்கு செல்போனில் அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன.
இதனால், எத்தனையோ நன்மைகள் உள்ளன. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுடன் எளிதாக அடுத்த வினாடியே தொலைபேசி மூலமாகவோ.. இணையதளம் வாயிலாகவோ இப்போது தொடர்பு கொள்ள முடிகிறது.
இணையதளத்தின் பயன்பாடு
தெரியாத இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட வழி கேட்டு தடுமாறும் நிலை இந்த காலத்தில் இல்லை. எளிதாக கூகுள் மேப்ஸ் போட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கிட்டத்தட்ட சரியாக சேர முடிகிறது. இப்படி இணையதளத்தின் பயன்பாடு ஏராளமானது உள்ளன. அதேபோல், சமூக வலைத்தளங்கள் மூலமாக முன் பின் தெரியாத நபர்களிடம் கூட அறிமுகம் ஆகி பலரும் நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். பயன்பாடுகள் அதிகம் இருந்தாலும் சில ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன.
மோசடி நபர்களின் வலையில் சிக்கி..
ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சமூக வலைத்தளங்களுக்கு அடிமை ஆகி அதில் இருக்கும் சிலர் மோசடி நபர்களின் வலையிலும் சிக்கி வீழ்ந்து ஏமாந்து போய் விடுகின்றனர். குறிப்பாக பெண்களை குறிவைத்துதான் சமூக வலைத்தளங்களில் பல மோசடிகள் நடக்கின்றன. முன் பின் தெரியாத சமூக வலைத்தள நபர்களை முழுமையாக நம்பிச்சென்று விடக்கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் மெக்சிகோ நாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
5 ஆயிரம் கி.மீ பயணம்
சமூக வலைத்தளத்தின் மூலமாக பழகிய ஆண் நண்பரை சந்திப்பதற்காக 5 ஆயிரம் கி.மீட்டர் பயணம் செய்து பெரு நாட்டிற்கு சென்ற 51 வயதான பிளன்கா அரேல்லனோ என்ற பெண், கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் விவரம் வருமாறு:- மெக்சிகோவை சேர்ந்த பிளன்கா அரேல்லனோ என்பவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக பெரு நாட்டை சேர்ந்த ஜூவன் பப்லே ஜீசஸ் வில்லேபுயேரட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மலர்ந்த காதல்
சமூக வலைத்தளங்களில் சில மாதங்களாக மிகவும் நெருக்கமாக பேசிய இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது காதலனை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட பிளன்கா அரேல்லனோ இதற்காக பெரு நாட்டின் தலைநகர் லிமா நகருக்கு செல்ல திட்டமிட்டார். இது குறித்து தனது குடும்பத்தினருடன் தெரிவித்து விட்டு ஜூலை மாத இறுதியில் பெருவிற்கு புறப்பட்டு சென்று இருக்கிறார். பெரு நாட்டில் உள்ள கடற்கரை நகரமான ஹுவாச்சோ- விற்கு சென்று இருக்கிறார்.
கடைசியாக 7-ம் தேதி போன் பேசினார்
பெரு நாட்டிற்கு சென்ற பிறகு தனது காதலனை சந்தித்ததாகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் நவம்பர் 7 ஆம் தேதி கடைசியாக பேசியிருக்கிறார். அதன்பிறகு பிளன்கா அரேல்லனோவிடம் இருந்து எந்த அழைப்பும் குடும்பத்தினருக்கு வரவில்லை. இதனால், பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து ட்விட்டர் மூலமாக பெரு நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பெரு நாட்டு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில்..
இதற்கிடையில், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ஹவுச்சோ கடல் பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதாக அங்குள்ள மீனவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். விசாரணையில், மெக்சிகோவில் இருந்து காதலரை பார்ப்பதற்காக வந்த பிளன்கா அரேல்லனோவின் சடலம் தான் இது என்பது தெரியவந்தது. உடல் உறுப்புகள் திருடப்பட்ட நிலையில், துண்டு துண்டாக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.
முன் பின் தெரியாத நபர்களை நம்பினால்
இது குறித்த தகவல் அறிந்த பிளன்கா அரேல்லனோவின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் மூலமாக பழகியவரை நம்பி 5 ஆயிரம் கி.மீட்டர் பயணம் செய்து நேரில் பார்க்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கதி.. சமூக வலைத்தளங்களில் முன் பின் தெரியாத நபர்களை முழுமையாக நம்பிவிடக்கூடாது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை காட்டுவது போல அமைந்து இருக்கிறது.