மேட்டூர் அணை நாளை மாலைக்குள் நிரம்பும்- காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர்: மேட்டூர் அணை மிக வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ இதர பணிகளுக்கோ கரையோர பகுதிகளுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவைவிட கனமழை கொட்டி வருகிறது.
தலைநகர் சென்னையில் இடைவிடாமல் பெய்த மழையால் திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சி தருகிறது. பெரும்பாலான குடியிருப்புகள் தீவுகளாக காட்சி தருகின்றன. சென்னையில் வெள்ள மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொட்டும் கனமழை
இதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஏரிகள் நிரம்பி வருவதால் ஆறுகளில் உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகின்றன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.

காவிரி நீர்
மேலும் கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பியதால் அவற்றின் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. பிலிகுண்டுவில் வினாடிக்கு 15,000 கனஅடி நீர் வந்த நிலை மாறி வினாடிக்கு 30,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் அருவிகள் நயாகரா நீர்வீழ்ச்சிகள் போல் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.
Recommended Video

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு
நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி விரைவில் எட்டும் வாய்ப்பு உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் நீர் மட்டத்தின் அளவு 117 அடியாக உள்ளது. இதையடுத்து நீர் வரத்தை கண்காணிக்க பொறியாளர்கள் தலைமையில் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வளாகத்திலேயே வெள்ளக் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நீர்வரத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

கரையோர மக்களு9க்கு எச்சரிக்கை
இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால் திறந்துவிடப்படும் உபரி நீர் அளவும் அதிகரிக்கப்படும். இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ இதர பணிகளுக்கோ கரைகளுக்கு வரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் பேட்டி
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அளித்த பேட்டி: தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாசனத் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 117 அடியை எட்டி உள்ளது அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியை நாளை மாலை அல்லது இரவுக்குள் எட்ட உள்ளது. மேலும் அணையிலிருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் வெளியேற்றப்படும். அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றும் நிலையும் உருவாகும். எனவே காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படியும் தாழ்வான பகுதிகளில் மக்கள் உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வேடிக்கை பார்ப்பதற்கு புகைப்படம் எடுப்பதற்கும் வேலை நிமித்தமாகவும் எந்த ஒரு மக்களும் கூட வேண்டாம். உபரி நீர் திறக்கப்படுகின்ற பொழுது 30 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்படும். எனவே பொதுமக்கள். விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழிலில் உள்ள நபர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் கூறினார்.












Click it and Unblock the Notifications