Review: தியேட்டரில் சக்க போடு போட்டு, ஓடிடிக்கு வந்த சர்வம் மாயா, எப்படி இருக்கு? நிவின் பாலியின் பிளஸ் நடிப்பு
சென்னை: சில படங்கள் இருக்கும்... அதிக விளம்பரம், பெரிய சத்தம் எதுவும் இல்லாமல் அமைதியாக வந்து, மனசுக்குள் மெதுவாக இடம் பிடித்துவிடும். 'சர்வம் மாயா' அப்படியான ஒரு படம் தான். மசாலா, ரத்தம், வில்லன், சண்டை என்று எதையும் தேடாதவர்களுக்கு, குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்க கூடிய ஒரு மென்மையான அனுபவம்.

சர்வம் மாயா கதை
நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த பிரபேந்து. அப்பாவைப் போல புரோகிதம் செய்ய வேண்டும் என்பதே குடும்பத்தின் ஆசை. ஆனால், அவனுக்கோ இசை தான் உயிர். கிட்டார் வாசிப்பவன், சினிமாவில் இசைக்கலைஞராக ஆக கனவு காண்பவன். கடவுள் நம்பிக்கையே இல்லாதவன்.
வெளிநாட்டுக்கு இசைக்குழுவுடன் செல்லும் வாய்ப்பு கைநழுவ, வேலை இல்லாத நேரத்தில் உறவினர் ஒருவருடன் பூஜை உதவியாளராக செல்லும் சூழல் வருகிறது. அங்கே நடந்த ஒரு சம்பவம், அவன் வாழ்க்கையை முற்றிலும் வேறொரு திசைக்கு இழுத்துச் செல்கிறது.
அவன் வீட்டில் தங்கி விடும் ஒரு ஆவி... ஆனால் அது பயமுறுத்தும் பேய் அல்ல. சாதாரண பெண்ணைப் போல பேசும், சிரிக்கும், கோபப்படும் ஒரு நவீன ஆவி.
அந்த ஆவி யார்? அவளின் கடந்த காலம் என்ன? கடவுள் நம்பிக்கை இல்லாத பிரபேந்து, அவளுக்கு எப்படி மோட்சம் கொடுக்கிறான்? இதுதான் 'சர்வம் மாயா'வின் மையம்.
படம் எப்படி பயணிக்கிறது?
முதலில் ஒரு லைட் காமெடி படமாக ஆரம்பிக்கிறது. இடையிடையே சிரிக்க வைக்கிறது. பிறகு மெதுவாக காதல், பயம், உணர்ச்சி என்று களங்களை மாற்றிக் கொண்டே செல்கிறது. இறுதியில் முழுக்க முழுக்க மனதைத் தொடும் ஒரு உணர்வுப் படமாக மாறுகிறது.
பேயை வைத்து கதை சொன்னாலும், இது பேய் படம் அல்ல. நம்பிக்கை, உறவு, மனக் குழப்பம், வாழ்க்கை தேடல் ஆகிய விஷயங்களை அழகாக பேசும் படம்.

பழைய நிவின் பாலி
பிரபேந்து கதாபாத்திரத்தில் நிவின் பாலி அசத்துகிறார். நகைச்சுவை, கோபம், குழப்பம், உடைப்பு - எல்லாவற்றையும் மிக இயல்பாக கொண்டு செல்கிறார். சமீப கால தோல்விகளுக்குப் பிறகு, அவருக்கு இது நிச்சயம் ஒரு பெரிய ஆசுவாசம்.
ரியா ஷிபு - படத்தின் பெரிய பலம்
இந்த படத்தை உண்மையில் முன்னெடுத்து செல்பவர் ரியா ஷிபு. நவீன ஜென் Z ஆவியாக வரும் அவரது நடிப்பு மிகப் புதுமை. குறும்புத்தனம், காமெடி, எமோஷன் எல்லாவற்றையும் சரியான அளவில் கொடுத்திருக்கிறார். பயமுறுத்தாத பேயாக கூட அவர் மனதில் நிற்கிறார்.
துணை கதாபாத்திரங்களும் டெக்னிக்கல் பலமும்
அஜூ வர்கீஸ் நண்பனாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பை உறுதி செய்கிறார். நிவின் பாலியின் அப்பாவாக வரும் ரகுநாத் பலேரி, ஒரே ஒரு காட்சியிலேயே கண்களை ஈரமாக்குகிறார். பிரீத்தி முகுந்தன் தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு உயிர். பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை இரட்டிப்பாக்குகிறது. ஷரன் வேலாயுதனின் ஒளிப்பதிவு அமைதியாக கண்களை நிறைக்கும் அழகு. இயக்குநர் அகில் சத்யன் செய்த எடிட்டிங் கச்சிதம்.
படத்தின் ப்ளஸ்
குடும்பத்துடன் பார்க்க ஏற்ற கதை, சிரிப்பும் உணர்வும் சமநிலை.. கடவுள், நம்பிக்கை, வாழ்க்கை பற்றிய மென்மையான கேள்விகள் மனசுக்கு லேசாக தொட்டு செல்லும் கிளைமாக்ஸ். தேவையற்ற சத்தம் இல்லாத படம்
'சர்வம் மாயா' ஒரு பெரிய விருந்து அல்ல. ஆனால், சுவையாக சாப்பிட்ட பிறகு மனசுக்கு நிறைவு தரும் ஒரு நல்ல உணவு. நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்த படம், அவசரமில்லாமல், அமைதியாக பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அனுபவம். மலையாள சினிமாவின் மென்மையான அழகை விரும்புபவர்களுக்கு, இதை தவற விடக் கூடாது.












Click it and Unblock the Notifications