திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 22: தாமரையை சிவபெருமானாக உருவகப்படுத்தும் மாணிக்கவாசகர்
சென்னை: மார்கழி மாதம் 22-ஆம் நாள் இன்று! மாணிக்கவாசகர் தனது பக்திப் படைப்புகளில், தாமரையை சிவபெருமானாகவும், அதிலிருந்து தேன் அருந்த வரும் வண்டுகளை தெய்வங்களாகவும் உருவகப்படுத்துகிறார்.
பிரம்மா, சரஸ்வதி, ருத்ரன், அம்பாள் உள்ளிட்ட பல தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனின் திருக்காட்சிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் தேவர்களே வண்டுகளுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். நாமும், பிறப்பற்ற நிலை என்னும் தேனை அடைந்திட, அந்த சிவபெருமானின் திருவடிகளை வண்டுகளைப் போல் பணிவோம்.

திருப்பாவை பாடல் 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: தங்களை மிஞ்சியோர் இல்லை எனப் பெருமைப்பட்ட உலகின் பேரரசர்களும் தற்போது பணிவுடன் உள்ளனர். அவர்கள், இறைவனின் பள்ளிகொண்ட படுக்கையைச் சுற்றி, சத்சங்க பக்தர்களைப் போல் காத்திருக்கின்றனர். இவர்களுடன் மற்ற அடியார்களும் நின்றனர்.
கிண்கிணி மணி ஒலிப்பது போலவும், தாமரை மெல்ல மலர்வது போலவும், இறைவனின் சிவந்த தாமரைக் கண்களைத் திறந்து, தம்மீது விழிக்க வேண்டும் என்பதே அடியார்களின் வேண்டுகோள். சந்திரனும் சூரியனும் உதிப்பது போன்ற அந்தக் கண் பார்வை, தங்கள் பாவங்களையும் சாபங்களையும் அகற்றும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 2
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.
பாடல் விளக்கம்: கிழக்கில், இந்திர திசையில், சூரியனின் தேரோட்டி அருணன் தோன்ற, அதிகாலை தொடங்குகிறது. இருளைப் போக்கி, மெல்ல எழும் சூரியன், திருப்பெருந்துறை சிவபெருமானின் கருணை ஒளியைப் போல் ஒளிர்கிறது.
தடாகங்களில் தாமரைகள் இறைவனின் கண்களாய் மலர, வண்டுகள் தேன்பருகக் கூட்டமாய் வந்துள்ளன. அருட்செல்வம், இன்பம், அருட்கடல் எனத் திகழும் சிவபெருமான் கண்விழிக்குமாறு இச்சூழல் கோருகிறது












Click it and Unblock the Notifications