திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 10: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜோக் சொன்ன ஆண்டாள்!
சென்னை: மார்கழி மாதம் 10-ஆம் நாள் இன்று! கும்பகர்ணன் போல் தூங்குகிறாய் என்பதை ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நகைச்சுவை. இவ்வாறு நகைச்சுவைகளை கேட்டு வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

திருப்பாவை பாடல் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: முற்பிறவியில் பாவை நோன்பு இருந்து கண்ணனை வணங்கியதால், இந்தப் பிறவியில் சந்தோஷமாக வாழும் பெண்ணே! நாங்கள் பலமுறை உன்னை எழுப்புகிறோம். உனக்கு கேட்கவில்லையா? எழுந்திருக்க முடியாவிட்டாலும், ஒரு வார்த்தையாவது பேசலாமே.
மணம் வீசும் துளசி மாலையை அணிந்த நாராயணன், நாம் கேட்ட வரங்களை நிச்சயம் தருவான். எமனிடம் சிக்கிய கும்பகர்ணனின் தூக்கம் உனக்கும் வந்துவிட்டதா? எங்கள் குலத்தின் அழகான ஆபரணமே! உன் தூக்கம் கலைந்து, எழுந்து வந்து கதவைத் திறப்பாய். இதுதான் இந்த பாசுரத்தின் அர்த்தம்!
திருவெம்பாவை பாடல் 10
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: தீய செயல்கள் செய்யாத நல்ல குலத்தில் பிறந்தவர்களும், கோயில் பணிகளை செய்யும் பெண்களே! நம் தலைவன் சிவனின் மகிமை சொல்ல முடியாத அளவுக்கு பெரியது. அவனின் திருவடிகள் ஏழு பாதாள உலகங்களுக்கும் கீழே சென்றுள்ளன.
பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவனின் திருமுடி, வானத்தின் எல்லையைத் தாண்டி உயர்ந்துள்ளது.
வேதங்களும், தேவர்களும், மனிதர்களும் ஒன்றாக சேர்ந்து பாடினாலும், அவனுடைய புகழை முழுமையாக பாடி முடிக்க முடியாது. அவனுடைய ஊர் எது, பெயர் என்ன, உறவுகள் யார், பக்கத்து வீட்டார் யார், எந்த வார்த்தைகளால் அல்லது எந்த பொருள்களால் அவனைப் பாட முடியும் என்பதையே சொல்ல முடியாத அளவுக்கு அவன் பெருமை உயர்ந்தது. இவ்வாறு இந்த பாடல் விளக்குகிறது.












Click it and Unblock the Notifications