தை அமாவாசை! தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா?
சென்னை: தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு தை அமாவாசை காலத்தில் தர்ப்பணம் கொடுக்கலாமா? தை அமாவாசையில் செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் வாரியாரின் மாணவி தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: தை மாத அமாவாசை ஏன் சிறப்புக்குரியது என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

தை மாதம் என்பது தேவர்களுக்கான விடியற்காலை காலம். அவர்களுக்கு பொழுது விடிய கூடிய காலம் தை மாதம். இதைத்தான் உத்திராயண காலம் என சொல்கிறார்கள். அதாவது பொழுது விடியக் கூடிய காலமாகும். விடிய கூடிய காலத்தில் வரும் முதல் அமாவாசை தை அமாவாசைதான்.
சூரிய பகவான் உதித்த பிறகுதான் நம் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். நாம் இன்று நல்ல நிலையில் இருக்க காரணம் நம் முன்னோர்கள்தான். ஒரு ஆன்மா குறிப்பிட்ட காலம் வரை அதாவது அடுத்த பிறவி எடுக்கும் வரை அந்த ஆன்மாவுக்கு தேவையான விஷயங்களை அவர்களுடைய சந்ததிகள் செய்யக் கூடிய இந்த வழிபாடுகளின் பலனாகத்தான் கிடைக்கிறது என பெரியவர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
இந்த ஆன்மா அடுத்த பிறவி எடுத்ததா, எங்கியிருக்கிறது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. அப்போது நாம் நம்மை சார்ந்த முன்னோர்கள் நலமாக இருக்க வேண்டும் என மனதார வாழ்த்திவிட்டுதான் முன்னோர்கள் வழிபாட்டை தொடங்க வேண்டும்.
இந்த ஆண்டு தை மாதம் அமாவாசை இன்றைய தினம் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இரவு 8.10 மணி முதல் இன்று இரவு 7.21 மணி வரை அமாவாசை இருக்கிறது. எனவே காலை 6 மணி முதல் 7.20 மணி வரையும், காலை 9 மணி முதல் 11.55 மணி வரை தர்ப்பணம் செய்யலாம்.
மாலை விளக்கேற்றி வழிபடும் நேரம் 6 மணி முதல் 7 மணி வரையாகும். காசி, கயாவில் முன்னோர்களுக்கு வழிபாடும் செய்வது என்பது விசேஷமானது. கயாவில் பெருமாளை சாட்சியாக வைத்து பிண்டம் வைத்து வழிபட வேண்டும். காசியில் சிவபெருமானை சாட்சியாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிண்ட தர்ப்பணத்தை எங்கு செய்தாலும் காசி, கயா என நினைத்துதான் செய்ய வேண்டும். இந்த ஆண்டு அமாவாசை அன்று பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரமும் வருகிறது. எனவே பெருமாளை மனதில் நினைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யலாம்.
ஒரு வீட்டில் அப்பா இருக்கிறார், அம்மா இல்லை என்றால், அந்த அம்மாவுக்கு அப்பா திதி கொடுக்கலாம். அதனால் மகன் கொடுக்கத் தேவையில்லை. ஒரு வேளை அப்பா கொடுக்கவில்லை என்றால் மகன், தனது அம்மாவுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். தற்கொலை செய்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சூரிய பகவானிடம், என் முன்னோர்கள் எங்கிருந்தாலும் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் கொடுத்த இந்த சின்ன (எள், தண்ணீர்) விஷயத்தை அவர்களிடம் சேர்த்துவிடுங்கள் என பிரார்த்தனை செய்துவிட வேண்டும். தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும், மதியம் இலை போட்டு படையலிட வேண்டும். மாலையில் விளக்கேற்ற வேண்டும். இந்த 3 விஷயங்களை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications