சிதம்பர ரகசியம்...நடராஜர் ஆலயத்தின் பஞ்சசபைகள் - கனகசபைக்கு இத்தனை சிறப்புகளா?
சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன.
சிதம்பரம்: கனகசபை மீதேரி சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன. பஞ்சசபைகளின் சிறப்புகளையும் பொன்னம்பலமாக திகழும் கனகசபையின் முக்கியத்துவத்தையும் பார்க்கலாம்.
சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பு அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும். வாஸ்து, ஆகம விதிகள் பிறழாது நெறிப்பட அமைந்த கோவில் இது. குறிப்பாக, சித்சபையானது மரத்தால் நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது. சித்சபை மேல் 21600 பொன் ஓடுகள் பொருத்தி, 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.
ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்
ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72000 அவன் ஒரு நாளைக்கு விடும் சுவாச காற்றின் எண்ணிக்கை 21600. மேல் உள்ள 9 கலசங்கள், 9 சக்திகள், நவரத்தினங்கள், நவகிரகங்கள் ஆகியவற்றை குறிக்கும். 9 வெளிவாசல்கள் மனிதனின் 9 துவாரங்களை குறிக்கும். 224 பலகை அமைப்புகள் 224 உலகங்களை குறிக்கும். 64 சந்தன கை மரங்கள் ஆயகலைகள் 64ஐ குறிக்கும். சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும். அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும். ருத்ரபீட 28 மரத்தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 ஜன்னல்கள் 96 தத்துவங்களை குறிக்கும்.
ஐந்து படிகள்
விஷ்ணு பீடத்தின் கதவுகள் அவித்தையையும், ரகசியத் திரை மாயையும் குறிக்கும். ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை குறிக்கும். இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்து படிகள் இருக்கின்றன. இவற்றிற்கு பஞ்சாட்சரபடிகள் என்று பெயர். இப்படிகள் இருபுறமும் யானை உருவங்கள் இருக்கின்றன. இங்கு நடராஜப் பெருமானின் திருமுடியிலுள்ள சந்திரனில் இருந்து உண்டான ஸ்படிகலிங்கமும், மாணிக்க மயமான ரத்தின சபாபதியும், சுவர்ண ஆகர்ஷண பைரவரும், நித்ய உத்ஸவர் முதலானவர்களும் எழுந்தருளியிருக்கின்றனர்.
சித்சபை
சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார். ஆடல்வல்லான் ஆடல்புரியும் இடம் சிற்றம்பலம் இதையே தான் சித்சபை என்று அழைக்கப்படுகிறது. நடராஜர் இச்சபையில் திருநடனம் புரிந்து ஐந்து தொழில்களையும் நிகழ்த்துகிறார்.
பொன்னம்பலம் என்ற கனகசபை
சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது பொன்னம்பலம் என்ற கனகசபை. நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும். பொன்னம்பலத்தின் முகப்பை ஆதித்த சோழன் கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த மாற்றுயர்ந்த பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழார் சுவாமிகள் கூறியுள்ளார். கனகசபையின் 18 தூண்டுகள் 18 புராணங்களை குறிக்கிறது. கனகசபையின் ஐந்து தளவரிசைக் கற்கள் பஞ்சபூதங்களின் தத்துவத்தை குறிக்கும். கனகசபையில் நின்றுதான் சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள். மேலும் ஆடல் வல்லானின் ஆட்டத்தை கனக சபையின் மூலமே தரிசிக்க முடியும். இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி ஆறுகால பூஜையும், பகல் இரண்டாம் காலத்தில் ரத்தின சபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறும்.
நடனசபை
சிதம்பரத்திற்கு ''நிருத்த சேத்ரம்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆடல்வல்லான் ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இது. தெய்வ திருநடன சிறப்பு பெற்ற இடம்தான் நடனசபை என்ற நிருத்த சபை ஆகும். சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர். சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிடவே அம்பாள் காலை தூக்கி ஆட முடியாமல் போகவே சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார்.
தேவசபை
பேரம்பலத்தில் ஐந்து மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர். இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான். இப்பேரம்பலத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்தான்.இங்குதான் மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சோமாஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.
ராஜசபை
ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு 999 தூண்கள் மட்டுமே உள்ளன. மீதமான ஒன்று நடராஜப் பெருமானின் ஊன்றிய கால். ஆக, மொத்தம் 1000 கால் மண்டபம் ராஜசபையாக விளங்குகிறது. ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன. இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. இது 5வது சபை யாகும். இங்குதான் ஆனி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் நடைபெறும் ஒன்பதாம் திருநாள்களில் நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வீற் றிருந்து, விடியற் காலையில் அபிஷேகம் நடைபெறும். பத்தாம் நாள் பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருக்காட்சியளிப்பார். பிறகு நடராஜர் முன்னதாகவும், சிவகாமி அம்மாள் பின்னாலும் மாறி மாறி நடனம் செய்து கொண்டு சித்சபைக்குச் செல்வர்.
சிதம்பர ரகசியம்
சிதம்பரம் என்றவுடன் ரகசியம் என்ற சொல்லும் உடனேயே நினைவுக்கு வராமல் போகாது. அற்புதத் தலத்தில் அதிசய ரகசியங்களும் இல்லாமல் இல்லை அப்படி என்ன தான் ரகசியம் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது என்று கேட்காதவரே இல்லை. ஐந்தாயிரமாண்டுகளுக்கும் மேலாக உலக முழுவதும் அறியப்பட்ட வார்த்தை, 'சிதம்பர ரகசியம்' ஆகும். ஆனால் , அதன் ரகசியம் அறிந்தவர் ஒரு சிலரே. சிதம்பர ரகசியத்தை புறக்கண்ணால் காணாமல் ஞானக்கண்ணால் கண்டுணர்வதே இந்த ரகசியம் உணர்வதன் அருளாகும். இதற்கு இறையருள் தேவை. பரம ரகசியமாகவும், பராபர ரகசியமாகவும் விளங்கும் சிதம்பர ரகசியம் சிவ ரகசியமாகும்.