ஊர் கண்ணு..உறவு கண்ணு பட்டிருக்கா..இந்த பரிகாரம் பண்ணுங்க..எல்லா திருஷ்டியும் மாயமாகும்
சென்னை: யார் கண்ணு பட்டுச்சோ..நல்லா இருந்த பிள்ளை இப்படி சோர்ந்து போய் இருக்கே என்று வீட்டில் இருந்த பெரியவர்கள் சொல்வார்கள். நன்றாக செய்து வந்த பிசினஸ் திடீரென டல் அடிக்கும். உடம்பில் ஏதோ புகுந்து கொண்டு இருப்பது போல பாரமாக இருக்கும். பகல் நேரத்தில் கூட அடிக்கடி கொட்டாவி வந்து தூக்கம் கண்ணை சொக்கும் இதற்கெல்லாம் காரணம் தெரியாமல் பலரும் குழம்பி போயிருப்பார்கள். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி தோன்றும். இதற்கு எல்லாம் காரணம் கண் திருஷ்டிதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள். கண் திருஷ்டியை போக்க நம்முடைய முன்னோர்கள் செய்து வரும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
கண் திருஷ்டியை போக்குவதில் மிளகாய்க்கு முக்கிய பங்கு உண்டு. ஏழு வர மிளகாய் வத்தல், கல் உப்பு போன்றவைகளை இடதுகையில் எடுத்து மூடிக்கொண்டு அதை திருஷ்டி பாதித்தவர்கள் மீது இடம் வலமாக மூன்று முறை சுற்றி துப்பச் சொல்வார்கள் அதை கொண்டு போய் நெருப்பில் போட்டு விடுவார்கள். கொஞ்சம் கூட மிளகாய் வாசம் வரலையே தும்மல் வரலையே எவ்வளவு திருஷ்டி இருக்கு பாருங்க என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
திருஷ்டி சுற்றிப்போட எப்போதுமே சாயங்காலம் எனப்படும் அந்தி மாலை நேரமும் சூரிய உதயத்திற்கு முந்தைய அதிகாலை நேரமும் சிறந்தது. திருஷ்டி சுற்றிப்போடுபவர்கள் நம்மை விட பெரியவர்களாக இருப்பார்கள்.
செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் மட்டுமே கிழக்கு திசை நோக்கி நின்றவாறு திருஷ்டி கழித்துக் கொள்ள வேண்டும்.
3 ஏரியா.. விருதுகள்.. 'கார்’.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அண்ணாமலை.. அப்போ அந்த விமர்சனம் உண்மைதானா?
எலுமிச்சை பரிகாரம்
கண் திருஷ்டியை போக்கும் அபரிமிதமான சக்தி எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சை அனைத்தையும் ஈர்க்கும். எலுமிச்சையை வாசலில் கட்டி தொங்க விட்டால் போதும்! எந்த ஒரு கண் திருஷ்டிகளும் உங்களை அணுகாது. எலுமிச்சையுடன் திருஷ்டி போக்க கரித்துண்டு, பச்சை மிளகாய்கள், இரும்புத்துண்டு ஆகியவற்றை சேர்த்து கட்டுவது வழக்கம்.
கண் திருஷ்டி கணபதி
படிகார கல்லை வீட்டின் வாசலில் கட்டுவது நல்ல பலன் தரும். படிகார கல் நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளையும் அழித்து சுத்தம் செய்துவிடும். படிகாரத்தை கருப்பு நூல் கொண்டு கட்டி தலைவாசலில் தொங்க விட்டு விடலாம். கருப்பு நூல் உபயோகப்படுத்தக்கூடாது என்று நினைப்பவர்கள் சிவப்பு நூலை கட்டி தொங்க விடலாம். குதிரையின் படத்தையும் வாங்கி மாட்டி வைக்கலாம். கண் திருஷ்டி கணபதி படத்தையும் மாட்டி வைக்கலாம்.
தேங்காய் பரிகாரம்
நன்கு முற்றிய தேங்காயை எடுத்து அதை சிகப்பு துணியில் வைத்து அதனுடன் சில சில்லரை காசுகளை போட்டு முடிந்து கட்டி வைப்பது பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெட்ட விஷயங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். இவர்கள் உண்மையிலேயே நம்மையும் நம் வீட்டையும் திருஷ்டி தோஷங்களிலிருந்து பாதுகாத்து தரும். 48 நாட்களுக்கு ஒருமுறை இந்த தேங்காயை மாற்றிவிட வேண்டும்.
வெண் கடுகு
வெண்கடுகுக்கு கண் திருஷ்டியை போக்கும் அபார சக்தி உள்ளது. மூன்று கண் உள்ள கொட்டாங்குச்சியை பரிகாரத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய வெள்ளைத் துணியில் ஒரு கைப்பிடி கல் உப்பு, வரமிளகாய் 3, ஒரு கைப்பிடி வெண்கடுகு, கட்டி கற்பூரம், வைத்து முடிச்சாக கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் இருப்பவர்களை, கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விட்டு, தலையை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். யாராவது ஒருவர் இந்த திருஷ்டியை கழிக்கலாம். வலது பக்கம் மூன்று முறை சுற்ற வேண்டும். இடது பக்கம் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலிருந்து கீழும் மூன்று முறை சுற்ற வேண்டும். எடுத்து வைத்திருக்கும் கொட்டாங்குச்சியில் ஒரு கற்பூரத்தை வைத்து தீ மூட்டி விடுங்கள். அது நன்றாக பற்றி எரிந்து தீ பிடித்துக் கொள்ளும். அந்த நெருப்பில் கொண்டு போய் இந்த திருஷ்டி கழித்த பொருட்களை போட்டு எரிக்க வேண்டும்.
மாதம் ஒருமுறை பரிகாரம்
எந்த பரிகாரம் செய்வதாக இருந்தாலும் நிலை வாசலுக்கு வெளியில் தான் வைத்து எரிக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பு. அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். மாதம் ஒரு நாள் கட்டாயமாக இந்த பரிகாரத்தை செய்து வர உங்கள் குடும்பத்தை பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் அந்த நெருப்பில் பொசுங்கிவிடும். இழந்த நல்ல வாழ்க்கை ஒரு சில நாட்களில் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும்.
பூக்கள்
நம்முடைய வீட்டிற்கு வரும் நபர்களால் கண் திருஷ்டி ஏற்படுவதைத் தவிர்க்க உருளி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாசம் மிக்க பொருட்களை அதில் போட்டு, மிதக்க விட்டு ஹாலில் பலரது கண் பார்வையில் படும் வகையில் வைக்கலாம். உருளியில் இருந்து தினந்தோறும் பழைய பூக்களை எடுத்து விட்டு தண்ணீரை மாற்றி புதிய பூக்களை அந்த பாத்திரத்தில் வைக்க வேண்டும். அதே போல ஒரு கண்ணாடி டம்பளரில் எலுமிச்சையை போட்டு வைக்கலாம். வாரம் ஒருமுறை இந்த தண்ணீரை மாற்றி விட வேண்டும்.
வண்ண மீன்கள்
வண்ண மீன்களுக்கு கண் திருஷ்டியை போக்கும் சக்தி உள்ளது. வாஸ்து சாஸ்திர அடிப்படையில் வண்ண மீன்கள் தொட்டியை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். வீட்டிற்குள் நுழையும் நபர்களின் பார்வை முதலில் மீன் தொட்டியின் மீது படும் வகையில் வீட்டின் முன்புறம் அல்லது ஹால் அறையில் மீன் தொட்டிகளை வளர்க்கலாம். இதனால் பலரது பார்வையும் மீன் தொட்டியின் மீது போய் விடும்.