மகாளய பட்சம் 2022: முன்னோர்களை மகிழ்விக்கும் மகாபரணி தர்ப்பணம்.. என்னென்ன நன்மைகள்
மதுரை: மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் நம் தலைமுறைகள் செழிக்கும். பித்ரு தோஷம் நீங்கும். தடைகள் நீங்கி சுப காரியம் நடைபெறும். எனவேதான் முன்னோர்களுக்கு பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை 14 நாட்களும் தர்ப்பணம் செய்ய ஏற்ற நாட்களாக குறிப்பிட்டுள்ளனர். இதில் மஹாபரணி நாளான நாளைய தினம் தர்ப்பணம் செய்தால் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம். பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.
மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி எமதர்மராஜன் அனுமதிப்பாராம்.

முன்னோர்கள் வருகை
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் அவர்களின் சந்ததிகள் வசிக்கும் வீடுதானே. எனவேதான் அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நம் இல்லத்திற்கு நம்மை காண வருகிறார்கள் என்பது நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை வறுமை நீங்கி விருத்தியடையும்.

வெற்றிகள் தேடி வரும்
நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று கவலைப்பட்டாலும் அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். எத்தகைய தடைகளையும் தாண்டி வெற்றியடையலாம்.

மகாபரணி
பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும். மஹாபரணி, மஹாவியதீபாதம், மத்யாஷ்டமி, அவிதவா நவமி ஆகிய நட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை அன்று ஒரு முறையாக இரு நாட்களில் முன்னோர்களுக்கான தில தர்ப்பணம், படையல் வைத்தல், தானதர்மங்கள் செய்தல் ஆகியவை செய்யலாம்.

பாவ மன்னிப்பு
நாளைய தினம் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். "மகா பரணி " இந்த நாளில் நாம் கொடுக்கும் திதி மற்றும் தர்ப்பணம் மேலே சொல்லப்பட்ட அத்தனை திதிகளுக்கான பலன்களை அளிக்கக்கூடியது இந்த நாள் இறைவன் நமக்களித்த மாபெரும் பாவமன்னிப்பு நாள். தந்தை அல்லது தாய் இறந்த திதி அறியாதவர்கள்கூட, இந்த நாளில் அவர்களுக்கான நீர்க் கடன்களைச் செய்யலாம். அவ்வாறு செய்வதன்மூலம் உரிய புண்ணிய பலன்கள், அந்த ஆத்மாவை அடையும் என்பது நம்பிக்கை. மேலும், 15 நாள்களும் கர்மாவினைச் செய்ய முடியாதவர்கள், மகாபரணி தினமான நாளைய தினம் தர்ப்பணம் செய்வது அவசியம். கூடவே தானம் செய்வதும் அவசியம்.

பித்ரு தோஷங்கள் நீங்கும்
வாழ்கையில் நாம் மனிதபிறவியில் செய்த பாவங்கள் பல அவற்றில் பெரிய பாவம் என்னவென்றால் அது நாம் நம் முன்னோர்களுக்கு செய்யத் தவறிய கடமைகள், அப்படிப்பட்ட கடமைகளை செய்யத்தவறியதன் காரணமாக மீண்டும் பிறவியெடுத்து இந்த பிறவியில் நம் தாய் தந்தையருக்கும் நம் தாத்தா பாட்டிகளுக்கும் செய்யும் கடமைகளை செவ்வனே செய்து முன்னோர்களுக்கு தவறாது சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்வதனால் நாம் நமது பிதுர் தோஷம் என்னும் நீத்தார் கடன் தீர்த்தல் ஆகும். மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications