மார்கழி மாத பிறப்பு..திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை கொடுத்த அண்ணன் ஸ்ரீரங்கநாதர்
திருச்சி: மாா்கழி மாதப் பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு வியாழக்கிழமை இரவு சீா் வரிசைகள் எடுத்து வரப்பட்டன. அண்ணன் என்ற முறையில் தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை கொடுத்திருக்கிறார் ஸ்ரீரங்கநாதர்.
திருச்சி மாநகருக்கு வெகு அருகில் உள்ளது பஞ்சபூத திருத்தலங்களில் நீர் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமையானதும், அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமான சுவாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் சோழ நாட்டின் காவிரி வடகரை கோவில்களில் அமைந்துள்ள அறுபதாவது கோவிலாகும்.
அதே போல், திருச்சி மாநகருக்கு அருகிலுள்ள மற்றொரு அம்மன் ஆலயம் சமயபுரம் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு சமயபுரம் மாரியம்மன் தங்கை என்ற முறையில், ஆண்டுதோறும் தைப்பூச திருநாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்பிக்கப்படுவது காலம் காலமாக நடந்துவரும் நடைமுறையாகும்.
உலக மக்களுக்கு படியளக்கும் சிவபெருமான்..மதுரையில் அஷ்டமி சப்பரத்தில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்
அதே போல், ஸ்ரீரங்கநாதரின் மற்றொரு தங்கையான திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அன்னை அகிலாண்டேஸ்வரிக்கும் ஆண்டு தோறும் மார்கழி மாத முதல் நாளன்று நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசைகள் சமர்பிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கம் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை பின்பற்றப்பட்டு வந்தது. காலப்போக்கில் அந்த நடைமுறை மறந்து போய், நூற்றைம்பது ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து சீர்வரிசை சமர்க்கப்படவில்லை.
மார்கழி முதல் நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இருந்து சீர்வரிசைப் பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையில், சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன வழக்கத்தை புதுப்பித்து மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர இரு கோவில் நிர்வாகத்தினரும் முடிவு செய்தனர்.
இதன்படி ஆண்டுதோறும் மாா்கழி மாதப்பிறப்பன்று ஸ்ரீரங்கநாதா் தனது சகோதரி அகிலாண்டேஸ்வரிக்கு பட்டுப் புடவை, தங்கத் திருமாங்கல்யம், மாலைகள்,அரிசி,காய்கறிகள் மற்றும் மங்களப் பொருள்களை சீா்வரிசையாக கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாா்கழி மாதப்பிறப்பையொட்டி வியாழக்கிழமை மாலை அரங்கநாதா் கோயிலில் சீா்வரிசைகள் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன.
பின்னா் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து,கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் மற்றும் கோயில் பணியாளா்கள் சீா்வரிசைகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா். பின்னா் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவானைக்கா சன்னதி வீதியில் உள்ள நாலுகால் மண்டபத்துக்கு சீா்வரிசைகளை யானை அகிலா முன்செல்ல மங்களவாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
பின்னா் சீா்வரிசைகளை திருவானைக்காவல் கோயில் அம்மன் அகிலாண்டேஸ்வரி கொடிமரத்தின் முன் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து திருவானைக்கா கோயில் நிா்வாக அலுவலா் ஜெகதீஸ்வரிடம் வழங்கினாா். இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், திருவானைக்கா கோயில் அா்ச்சகா் வாசு மற்றும் இரு கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை காலை இந்தச் சீா்வரிசைகளைக் கொண்டு நைவேத்தியம் செய்து திருஅன்னப்பாவாடை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கை
முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்துவதற்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதத்திற்கான காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் சேகரிக்கப்பட்டு, கருட மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு, கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் ஆர்.ஹரிஹரசுப்பிரமணியன், கோவில் மேலாளர் கு.தமிழ்செல்வி, ஆய்வாளர் சு.பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் ரூ. 48 லட்சத்து 29 ஆயிரத்து 243, தங்கம் 70 கிராம்,வெள்ளி 465 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 251 ஆகியவை காணிக்கையாக வந்தது தெரியவந்தது. காணிக்கை எண்ணும் பகுதி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.