திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 28: இறைவனை வணங்க பணம், காசு தேவையா என்ன?
திருப்பாவை - பாடல் 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: குறையே இல்லாத கோவிந்தா! நாங்கள் பசுக்களை மேய்த்து அதில் இருந்து கிடைக்கும் பால் மூலம் தயிராக்கி தயிர் சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவே கிடையாது. ஆனால் உன்னை வணங்கினால் வைகுண்டம் எங்களுக்கு உறுதி என்பதை பிறபவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பது மட்டும் தெரியும். உன்னுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது. கண்ணா, மணிவண்ணா கோவிந்தா கோபாலா என உன் மீதான உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே, எங்கள் நோன்பை ஏற்றுக் கொள்!
திருப்பள்ளியெழுச்சி பாடல் - 8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பாடல் பொருள்: என்னை ஆட்கொண்ட ஆராவமுதனே! மெல்லிய விரல்களைக் கொண்ட பார்வதியுடன் அடியவர்களின் வீடுகளுக்கு வரும் பரமேஸ்வரா, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறிய மாட்டார்கள் எனும் போது மற்றவர்கள் எப்படி அறிவார்கள்? அந்தணர் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய்! இத்தகைய சிறப்புகளை உடையவனே படுக்கையில் இருந்து எழுந்து எங்களுக்கு அருள் புரிவாயாக!
விளக்கம்: இறைவன் மிகவும் எளிமையானவன். ஓலை குடிசைகளை உடமையாகக் கொண்டவர்களின் வீட்டுக்கும் வருவான். இறைவனை வணங்க நல்ல உள்ளம் மட்டும் இருந்தால் போதுமானது.












Click it and Unblock the Notifications