நாளை பொள்ளாச்சியில் உள்ள மசானியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பக்தர்கள் கூடுகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: பொள்ளாச்சி அருகே பிரச்சித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பெருந்திரளாக குவிந்து வருகின்றனர். மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து 24 கிமீ தொலைவில் ஆனைமலை குன்றின் அடிவாரத்தில்தான் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன், படுக்கை நிலையில் காட்சி தருகிறவர்.

"சங்க காலத்தில் நன்னன் என்னும் மன்னன் ஆண்டு வந்த நன்னனூர் தற்போது ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. நன்னனின் ஆளுகைக்குட்பட்ட உப்பாற்றங்கரையின் அருகே உள்ள அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தது. ஒருநாள் ஆற்றில் தன் ஒத்த இளவயது பெண்களோடு நீராட வந்த ஒரு இளம்பெண் அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை உண்டுவிட்டதனை அறிந்த நன்னன் அப்பெண்ணை கொலை செய்துவிடும்படி உத்திரவிட்டதால், அவளது தந்தை தனது மகளின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தொரு ஆண் யானைகளையும் அறியாது செய்த தவறுக்கான தண்டம் செலுத்துவதாக கூறியும் அதனை ஏற்காமல் அப்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும், கொலையுண்ட அந்தப் பெண்ணை மயானத்தில் சமாதிபடுத்தி, அதன்மீது அந்தப் பெண் போன்ற ஒரு உருவத்தை அமைத்து மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அந்தபெண் நாளடைவில் மாசாணி என்று அழைக்கப்பட்டு வழிபட்டு வரப்படுகிறது என செவிவழி செய்தி வாயிலாக அறிய வருகிறது" என இந்த கோவிலின் தலவரலாறாக சொல்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

பிற கோவில்களில் இல்லாத ஒன்று மாசாணி அம்மன் கோவிலில் உள்ளது. அது நீதிக் கல் என்பதாகும். இந்த நீதிக் கல்லில் தமக்கு நீதி கேட்டு மிளகாய் அரைத்து பூசினால் மாசாணியம்மன் அதனை நிறைவேற்றித் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமக்கு துரோகம் செய்தவர்களை அம்மன் தண்டித்தாக வேண்டும் என்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் இந்த நீதிக் கல்லில் மிளகாய் அரைத்து பூசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் 'மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் பூசி விட்டிருக்கிறார்கள்' என்று சொன்னாலே ஒருவித அச்சம் இப்பகுதி மக்களிடையே இருந்து வருகிறது.

மாசாணியம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை வழிபட்டால் அம்மன் அருள் கிடைக்கும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இத்தகைய சிறப்புமிக்க மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.

கோவிலின் ராஜகோபுரத்துக்கு 7 கலசங்கள், கருவறைக்கு 3, திசை கோபுரங்களுக்கு 10, பரிவாரமூர்த்திகளுக்கு 32 என மொத்தம் 52 கலசங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. இன்று 4,5 கால யாகபூஜைகள் நடைபெற்றன. நாளை காலை 6-ம் கால யாக பூஜை நடைபெறும். இதனையடுத்து நாளை புதன்கிழமை காலை 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை மாலை அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

இந்த விழாவில் பங்கேற்க பக்தர்கள் பெருந்திரளாக குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிப்பிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 12 இடங்களில் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. கும்பாபிஷேகம் நடைபெறும் நாளைய தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது எதிர்பார்ப்பு.

மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை வழித்தடத்தில் நாள்தோறும் 26 பேருந்துகள் இயக்கப்படும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 30 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மதுரை, திண்டுக்கல், திருச்சியில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வருகை தருவதால் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான பாதுகாப்புப் பணிகளில் 1,000-க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+