சங்கரா தொலைக்காட்சியில் பெரியவா தொடர்..வீடு தேடி வரும் காஞ்சி பரமாச்சாரியாரின் அருள் மழை
சென்னை: சங்கரா தொலைக்காட்சியில் ஜனவரி 7 முதல் 'பெரியவா' எனும் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. பெரியவாவின் அருட் கருணை நம் எல்லோருக்கும், சங்கரா டிவியின் இந்தத் தொடரின் மூலம் கிடைக்கும் என்று நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
சங்கரா தொலைக்காட்சி கடந்த 14 ஆண்டுகளாக ஆன்மிகம், கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 7ஆம் தேதி முதல் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதி காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புதிய தொடரான பெரியவா' ஒளிபரப்பாக உள்ளது.
இந்த தொடரின் தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கராலயம்' வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவைத் தொடங்கி வைத்து பேசிய பத்மா சுப்ரமணியம், சங்கரா டிவி மூலமாக காமகோடி குடும்பம் இங்கே சேர்ந்திருக்கிறது. ஜனரஞ்சகமாகவும் ஆத்மானுபவமாகவும் பெரியவா' குறித்த தொடரை உருவாக்குவதற்கு சங்கரா டிவிக்கு பெரியவாவின் ஆசி இருந்திருக்கிறது.
தலைமுறை தலைமுறையாக பெரியவாவின் அருள் தொடர்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தலாய் லாமா ஒரு பேட்டியில் நாங்களெல்லாம் பெரிய சன்யாசிகள் அல்ல, காஞ்சி பெரியவர்தான் பெரிய சன்யாசி என்று கூறியிருக்கிறார். பெரியவாவின் அருட் கருணை நம் எல்லோருக்கும், சங்கரா டிவியின் இந்தத் தொடரின் மூலம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பெரியவா' தொடரின் இயக்குநர் பாம்பே சாணக்யா பேசும்போது, ''அடுத்த தலைமுறைக்கு பெரியவாவின் கருத்துகளை, தத்துவங்களை கொண்டு செல்வதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே வளரும் கதையாக இந்தத் தொடரை உருவாக்கியுள்ளோம். பெரியவாவின் உபதேசங்கள் தற்போதைய வாழ்க்கைக்கும் எப்படிப் பொருந்துகிறது என்பதை புரியவைக்க முயன்றிருக்கிறோம்.
நான்கு தலைமுறைகளின் வழியாகப் பயணிக்கும் கதையில் 80 வயது பெரியவாவாகத் தோன்றுபவர் முத்துவெங்கட்ராமன். 30 வயது பெரியவாவாகத் தோன்றுபவர் ராகவன். 13 வயது பால பெரியவாவாகத் தோன்றுபவர் வருண். பெரியவாவின் வாழ்க்கையை எளிதில் விளக்கவோ, வரையறைக்குள் கொண்டுவர முடியாது. இப்போதைக்கு 26 வாரத்துக்குதொடரை எடுத்திருக்கிறோம். இதுமேலும் விரிவடையக் கூடும் என்றார் இயக்குநர் பாம்பே சாணக்யா.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமானுஜர் சீரியல் பெரும்பாலானவர்களால் ரசிக்கப்பட்டது. அது போல சங்கரா டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஆன்மீக சீரியல் பெரும்பாலான ரசிகர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கலாம்.