ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. கோவையில் வீடு வீடாக அட்சதை.. ஸ்ரீராம ஜெயம் சொல்லி வழிபட வேண்டுகோள்
கோவை: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் வீடுகளுக்கு அட்சதை வழங்கப்பட்டது இதில் ஹிந்து முன்னணி ஆர் எஸ் எஸ் சேவாபாரதி போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வீடு வீடாக அட்சதையை வழங்கியதுடன் ராமஜெயம் சொல்லி வழிபட கேட்டுக்கொண்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12.30 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.

இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கும் பணிககளை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ்களை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று அட்சதை, கும்பாபிஷேக அழைப்பிதழ், ராமர் படம் போன்றவைகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் அம்மன் குளத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் வீடுகளுக்கு அட்சதை வழங்கப்பட்டது. இதில், இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், சேவாபாரதி போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வீடு வீடாக அட்சதையை வழங்கினர்.
அப்போது, காடேஸ்வரா சுப்ரமணியம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளை தொடர்பு செய்து இந்த அட்சதையை வழங்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முடிவு செய்துள்ளது. கோவையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழங்க உள்ளோம் என்று கூறினார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளன்று ஒவ்வொரு வீடுகளிலும் கோலமிட வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீராம ஜெயத்தை பாராயணம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதே போல கோவை மாவட்டம் சூலூர், மயிலம்பட்டி, சோமனூர், கருமத்தம்பட்டி போன்ற ஊர்களில் வீடு வீடாக சென்று அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர். ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் அதே நேரத்தில் வீடுகளில் ராம நாமம் சொல்லவும், மாலையில் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திராவிட மண் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பு போய்ச்சேர வேண்டும் என்பது ஆர்எஸ் எஸ் மேலிடத்தில் இருந்து வந்துள்ள உத்தரவு என்கிறார்கள். ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பு மூலம் இந்துக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications