சபரிமலை மண்டல பூஜை..மகர விளக்கு பூஜை..நவ.16ல் ஆரம்பம்..ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் பதிவு அவசியம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16ம் தேதி மாலை தொடங்கும் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதத்தில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறும்.
இந்த ஆண்டு நவம்பர் 17 முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல திருவிழா காலம் மண்டல பூஜை டிசம்பர் 27ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை நிறைவடைந்தபின் டிசம்பர் 27ஆம் தேதி சபரிமலை கோயில் நடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை யாத்திரை
கார்த்திகை மாதம் பிறப்பதற்கு முதல்நாளே ஐயப்ப பக்தர்கள் புது வேஷ்டி, மாலை வாங்கி விரதத்திற்கு தயாராகி விடுவார்கள். கார்த்திகை 1ஆம் தேதி பிறந்த உடன் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு குரு சாமி கையினால் மாலை அணிந்து சாமியே சரணம் ஐயப்பா என்று பக்தி முழக்கமிட்டு விரதத்தை தொடங்குவார்கள். காலை மாலை இரண்டு வேலையும் குளித்து விட்டு ஐயப்பனை நினைத்து விரதம் இருப்பார்கள். இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களின் விரத நாள் வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ளது.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
41 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் காலில் செருப்பு அணியாமல் கடுமையான விரதம் மேற்கொள்வார்கள். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று பய பக்தியோடு விரதம் இருக்கும் பக்தர்களை காத்து ரட்சிப்பார் சபரிமலை ஐயப்பன்.

மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை காலம் 41 நாட்கள் வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. டிசம்பர் 27 வரை மண்டல பூஜை காலமாகும். டிசம்பர் 26ஆம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். டிசம்பர் 27ஆம் தேதி மண்டலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும்.

ஸ்பாட் புக்கிங் வசதி
சபரிமலையில் நடைபெறும் மகரவிளக்கு பூஜை சாமி தரிசனத்துக்காக 13 மையங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை மகரவிளக்கு விழாவை ஒட்டி டிசம்பர் 30ம் தேதி மாலையில் நடை திறக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14 மகர விளக்கு, சபரிமலை கோயில் நடை ஜனவரி 20ம் தேதி மூடப்படும் எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தரிசிக்க ஆன்லைன் பதிவு அவசியம்
சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் அறிவித்துள்ளார். முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் நிலக்கல்லில் 16ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் சாந்தி
சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல் மாளிகப்புரம் மேல் சாந்தியாக குலுக்கல் முறையில் ஹரிஹரன் நம்பூதிரி தேர்வானார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரு மேல் சாந்திகளும் வரும் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை முதல் ஒரு ஆண்டு பணியாற்றுவார்கள்.












Click it and Unblock the Notifications