சபரிமலையில் உடனடி முன்பதிவு ரத்து..நெரிசலை தவிர்க்க ஒரு மணி நேரத்தில் 4800 பக்தர்கள் தரிசனம்
சபரிமலை: ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருப்பதால் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 4800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குப் பின் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 1 மாத காலத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு நடைமுறை பின்பற்றப்படுகிறது. கூட்டநெரிசலால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ன என மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தான் நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள்,குழந்தைகள், முதியவர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டது.
அதேசமயம் வரிசையில் நிற்பவர்கள் பல மணி நேரம் உணவே, தண்ணீரோ இல்லாமல் நிற்பதாக புகார் எழுந்தது. இப்படியான குற்றச்சாட்டுகளை களையும் வகையில் தேவசம்போர்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சன்னிதானத்தில் உள்ள 18ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை வேகமாக மேலே ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உடனடி தரிசன முன்பதிவு வசதி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவசம்போர்டு அதிகாரி , சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நேற்றைய தினம் ஏற்கனவே (கட்டுப்பாடுக்கு முந்தைய) 1 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள். இதனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உடனடி தரிசன முன்பதிவு வசதி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
சபரிமலையில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்படும். இந்த தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. சபரிமலை மண்டல பூஜை காலத்தில், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஆரன்முலா பார்த்த சாரதி கோவிலில் இருந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க அங்கி ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலம் டிசம்பர் 26ஆம் தேதி பம்பை கணபதி கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து அன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும். டிசம்பர் 27 ம் தேதி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். இதையடுத்து, கோயில் நடை மூடப்படும். அதன் பின்னர், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications