மன்னராட்சியில் சமூக நீதி.. கல்வி புரட்சி செய்த பலராம வர்ம.. சபரிமலை சித்திரை ஆட்டத் திருநாள் வரலாறு
சபரிமலை: சித்திரை ஆட்டத் திருநாள் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மாத பிறப்பு, மண்டல பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று ஏன் திறக்கப்படுகிறது? அது என்ன ஐப்பசி மாதத்தில் சித்திரை ஆட்டத் திருநாள் என்று யோசிப்பவர்கள் அதன் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்.
மன்னர் ஆட்சி: மன்னர்கள் ஆட்சியை பலரும் சர்வாதிகார ஆட்சி காலம் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். மன்னர் இட்ட கட்டளையை யாரும் மீற முடியாது என்பது உண்மைதான். தமிழ்நாட்டை பல மன்னர்கள் ஆண்டு ஆட்சி செய்திருந்தாலும் தஞ்சையை ஆண்ட ராஜ ராஜசோழனின் ஐப்பசி சதய திருநாள்தான் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆயிரம் ஆண்டு காலமாக மன்னனின் புகழ் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் தஞ்சை பெரிய கோவில் மட்டுமல்ல ராஜ ராஜ சோழனின் ஆட்சி முறைதான்.

சித்திரை திருநாள் பாலராம வர்மா: அதுபோல கேரளாவில் ஆட்சி செய்த மன்னர் மக்களுக்கான மன்னராக சமுக நீதியை புகுத்திய மன்னராக கல்வியில் புரட்சி செய்த மன்னராக இருந்துள்ளார். அவரது பிறந்தநாளைத்தான் சித்திரை ஆட்டத்திருநாளாக கொண்டாடுகின்றனர். 12 வயதில் மன்னராகும் வாய்ப்பு கிடைத்து, மக்கள் ஆட்சி நடைமுறைக்கு வரும் நாள்வரை மக்களுக்காக ஆட்சி செய்த சித்திரை திருநாள் பாலராம வர்மா பிறந்த நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு விசேஷ பூஜை செய்வதே சித்திரை ஆட்டதிருநாள்.
ஐப்பசி சித்திரை: 1912ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் பலராம வர்ம. திருவிதாங்கூர் அரச குடும்பத்திலிருந்து ஆட்சி செய்த கடைசி மன்னர் சித்திரை திருநாள் பாலராம வர்ம. இவரது ஆட்சி காலத்தில்தான் கேரளா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கல்விக்கு முக்கியத்துவம் அளித்த இந்த மன்னர்தான்.
கல்வி புரட்சி: இந்தியாவின் பத்தாவது குடியரசு தலைவரான கே.ஆர்.நாராயணன் அவர்களின் மேற்படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றவர். பெண்கள், குழந்தைகளுக்கு என பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். அரசு வருமானத்தில் 40 சதவீதம் கல்விக்கு ஒதுக்கிய மன்னர் பலராம வர்மா அனைவருக்கும் இலவச கட்டாய கல்வியை அமல்படுத்திய மன்னர்.
சமூக நீதி காத்த மன்னர்: கல்வி புரட்சி செய்த இவர், கோவில்களிலும் புரட்சி செய்தார். ஒரு சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே கோவிலுக்குள் நுழைய முடியும் என்ற காலத்தில் இந்து மதத்தைச் சார்ந்த அனைத்து ஜாதியினரும் கோயில்களில் அனுமதித்து ஆலயப் பிரவேச விளம்பரத்தை வெளியிட்டதன்மூலம் புரட்சி செய்தவர்.
விவசாயிகளின் காவலன்: கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீர்தேக்கத்தில் ஒன்றான பெருஞ்சாணி அணை, நம் திற்பரப்பு பகுதியில் கோதையாற்றின் குறுகே அணை அமைத்து பாசன கால்வாய்கள் அமைத்து தந்தவர் இந்த மன்னர்தான் . மலையோர கிராம மக்கள் எளிதில் திற்பரப்பு வந்து செல்ல அவர் ஆட்சிகாலத்தில் அமைத்த இரும்பு பாலம், 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாத நிலையிலும் இன்றும் உறுதியுடன் நிற்கிறது.
சபரிமலையில் விஷேச பூஜை: மன்னர்களின் பிறந்த நாளுக்கு முன்பு கல்வி நிலையங்களில் விடுமுறை அளிப்பதுடன், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதும் வழக்கம். கோயிலில் அனைத்து சாதியினரும் செல்லலாம் என உத்தரவு பிறப்பித்த சித்திரை திருநாள் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு விசேஷ பூஜை செய்வதே சித்திரை ஆட்டத் திருநாளாகும்.
சித்திரை ஆட்டத்திருநாள்: இந்த ஆண்டு நாளைய தினம் சித்திரை ஆட்டத்திருநாள் விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. நாளைய தினம் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெறும். இரவு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.
மண்டல பூஜை: இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி மாலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை மண்டல பூஜைக்காக கோவில் நடை திறந்திருக்கும். அன்றிரவு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதியன்று கோவில் நடை திறக்கப்பட்டு 2024ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரைக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். சாமி தரிசனத்திற்காக ஆன்லைன் புக்கிங் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications