
திருப்பதி ஏழுமலையானுக்கு கொட்டிக்கொடுக்கும் பக்தர்கள்..உண்டியல் வருமானம் ரூ.1600 கோடியாம்!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வருவாய் புதிய சாதனைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டில் ரூ.1600 கோடி உண்டியல் வருவாய் கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை ரூ.15,938 கோடிகளையும், மற்றும் தங்கம் கையிருப்பு 10,258 கிலோவைத் தாண்டியுள்ளது.
ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிக்கணக்கானோர் தினசரியும் திருப்பதி வந்து செல்கின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து சில நிமிட நேரம் தரிசனம் செய்தாலும் மன திருப்தியுடன் செல்கின்றனர் பக்தர்கள்.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். அம்பானி போன்றவர்கள் தங்கம் வைரம் என உண்டியலில் செலுத்துகின்றனர். அதே நேரத்தில் ஏழை நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற பணத்தை காணிக்கை செலுத்து கின்றனர். தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விடுவதன் மூலம் பல கோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.

ஏழுமலையானுக்கு காணிக்கை
1950ஆம் ஆண்டு வரை ஏழுமலையானுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது, ஆனால் 1958ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது. 1990 ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உண்டியல் வருவாய் வரத் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

கோடிக்கணக்கில் வருமானம்
கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 23 தேதி ஒரே நாளில் ரூ.3.6 கோடியாகவும், 2011 ஆண்டு நவம்பர் 1 தேதி ரூ.3.8 கோடியாகவும், 2012 ஜனவரி 1ஆம் தேதி ரூ.4.23 கோடியாகவும் இருந்தது. 2012 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.5.73 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி ரூ.6 கோடியைத் தாண்டியது.
2015-16ஆம் உண்டியல் ஆண்டு வருமானம் ரூ..1,000 கோடியைத் தாண்டியது. 2019-20- நிதி ஆண்டில் ரூ.1,313 கோடியை எட்டியது.

கொரோனா காலத்தில் குறைந்த வருமானம்
கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் கோவில் உண்டியல் வருமானம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்தது. 2020-21ல் நிதி ஆண்டில் ரூ.731 கோடியும், 2021-22ல் ரூ.933 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. நடப்பு நிதியாண்டில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதிக்கு வருகிறது.

உண்டியல் வருமானம்
ஏழுமலையான் கோயில் உண்டியலில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் உண்டியல் வருமானமாக ரூ.1161.74 கோடி கிடைத்துள்ளது. 8 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நவம்பர் மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.127.30 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், இந்த நிதி ஆண்டில் உண்டியல் வருவாய் ரூ.1600 கோடியைத் தாண்டும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

ரூ.1600 கோடி வருமானம்
கடந்த 9 மாதங்களில், அதிக பட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.139.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தினமும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவதாலும், தினமும் நான்கு கோடி ரூபாய் உண்டி வருமானம் கிடைப்பதாலும் இந்த அளவில் உண்டி வருவாய் கிடைக்கின்றதும் இதுவரை 2019-20 நிதி ஆண்டுக்கான அதிகபட்ச உண்டியல் வருவாய் ரூ.1,313 கோடியாகும். இந்நிலையில் இந்த நிதி ஆண்டில் ரூ.1600 கோடி உண்டியல் வருவாய் கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களுக்கு வசதிகள்
ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு 1000 கோடி கிடைப்பதால் தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை ரூ.15,938 கோடிகளையும், மற்றும் தங்கம் கையிருப்பு 10,258 கிலோவைத் தாண்டியுள்ளது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு திருமலையில் தங்கும் வசதி, அன்னதானம் போன்ற வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் வைகுண்ட ஏகாதசி வருவதால், உண்டி வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.