வைகாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..மிஸ் பண்ணாதீங்க
திருவண்ணாமலை: வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளைய தினம் பௌர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் இரண்டு நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்து வணங்குவார்கள். மேலும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இந்த மலையை இன்றைக்கும் ஏகப்பட்ட சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர். இங்குள்ள மலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாத பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம். இங்கு ஜீவ சமாதியான சித்தர்கள் இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம். இங்கு தினந்தோறும் கிரிவலம் வந்தாலும் பௌர்ணமியில் கிரிவலம் வருவது சிறப்பு.
அதன்படி வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான நேரத்தை ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை ஜூன் 3ஆம் தேதி காலை 11.16 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.11 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம். மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications