வைகுண்ட ஏகாதசி..இன்று ஆழ்வார் திருமஞ்சனம்..இலவச தரிசன டோக்கன் எங்கெங்கு கிடைக்கும் தெரியுமா?
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளதால் இன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வைகுண்ட ஏகாதசிக்காக இலவச தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் நாள் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதை முன்னிட்டு 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால், 27ஆம் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி அணில்குமார் சிங்கால் திருமலையில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணில்குமார், வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். 10 நாட்களுக்கு தொடர்ந்து டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் எதிரே விஷ்ணுநிவாசம், ரயில் நிலையம் பின்புறம் உள்ள சத்திரங்கள், பேருந்து நிலையம் எதிரே சீனிவாசம் வளாகம், இந்திரா மைதானம், ஜீவகோனா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி, பைராகிப்பட்டேடாவில் ராமநாயுடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர். பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி ராமச்சந்திர புஷ்கரணி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் வைகுண்ட துவார தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டிகள் வினியோகம் செய்ய திருப்பதியில் மட்டும் 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்களுக்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போலீசாரும், தேவஸ்தான அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சபரிமலை மண்டல பூஜை..தங்க அங்கியில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்..குவியும் வருமானம்