வாஸ்து டிப்ஸ்.. தெரியாம இந்த திசையில் செப்டிக் டேங்க் கட்டாதீங்க.. தீராத கடனும் நோயும் வருமாம்
சென்னை: சரியான வாஸ்து முறைப்படி கட்டப்படும் வீடு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். புது வீட்டிற்கு குடி போன நாளில் இருந்தே சிலர் வியாதிக்காக மருத்துவமனைக்கு செலவு செய்வார்கள். அவர்கள் வீட்டில் செப்டிக் டேங்க் சரியான இடத்தில் கட்டப்பட்டிருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்.
செப்டிக் டேங்க் வாஸ்து: நம்முடைய வீட்டில் சரியான திசையில் கழிவு நீர் தொட்டியோ, மழை நீர் சேகரிப்பு தொட்டியோ கட்டியிருக்கா விட்டால் உடல் நல பாதிப்பு, தொழில் நஷ்டம், பொருள், பண இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த திசையில் கழிவு நீர் தொட்டி ( Septic tank vastu) அமைக்க வேண்டும் எந்த திசையில் கழிவு நீர் தொட்டி அமைக்கக்கூடாது என்று பார்க்கலாம்.

வடகிழக்கு: நாம் அன்றாடம் நமது உடலில் இருந்து வெளியேற்றும் கழிவுகள், கழிவறையில் இருந்து குழாய் மூலமாக அதற்கென்று கட்டப்பட்ட ஒரு தொட்டியில் வந்து சேரும். கழிவுகளை சேகரிக்கும் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.
ஈசான்ய மூலை: வாஸ்து சாஸ்திரத்தில் வடகிழக்கு கடவுளின் இருப்பிடமாக போற்றப்படுகிறது. ஈசான்ய மூலை அங்கு சிவனின் இருப்பிடமாக வணங்கப்படுகிறது. எனவே குடியிருப்பாளர்கள் ஒருபோதும் வடகிழக்கில் செப்டிக் டேங்க் கட்டக்கூடாது. வடகிழக்கில் செப்டிக் டேங்க் கட்டினால் பண இழப்பு, தொழில் நஷ்டம் உண்டாகும். தென்கிழக்கு எனப்படும் அக்னி மூலையில் கட்டினால் செல்வ இழப்பும், குடும்ப தலைவிக்கு உடல்நல பாதிப்பும் ஏற்படும்.
செப்டிக் டேங்க் எங்கு கட்டுவது: அதே நேரத்தில் வடமேற்கு - வடக்குப் பகுதியில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, வடக்கு மதில் சுவருக்கு வெளியே, மதில் சுவரைத் தொடாமலும் அமைக்கலாம். தென்மேற்கு மூலையில் செப்டிக் டேங்க் கட்டினால் மன அமைதி பாதிப்பும் உயிர் இழப்பும் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. செப்டிக் டேங்க் கட்ட சரியான இடம் வட மேற்கு பகுதிதான் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கில் செப்டிக் டேங்க் கட்டலாமா: தென்மேற்கு எனப்படும் கன்னி மூலையில் செப்டிக் டேங்க் கட்டக்கூடாது. அது செல்வத்தை சேகரிக்கும் பகுதி. அங்கு கழிவுகளை சேகரித்து வைக்கக்கூடாது. அப்படி செப்டிக் டேங்க் கட்டப்பட்டால் அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். சொத்துக்களிலும், வியாபாரம் தொழிலிலும் கடுமையான நஷ்டத்தை தரும்.
வாஸ்துபடி தவறு: தென்மேற்குப் பகுதிகளில் செப்டிக் டேங்க் கட்டப்பட்ட வீடுகளில் கடுமையான நிதி நெருக்கடியை கொடுக்கும், அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நாள்பட்ட உடல்நலக் கோளாறுகளை தரும். அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
மழைநீர் சேகரிப்பு தொட்டி வாஸ்து: பருவமழை தொடங்கப்போகிறது. மழை நீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டிலும் குடியிருப்பிலும் கட்டாயம் மழை நீர் சேகரிப்புத் தொட்டி (Rain Water Harvesting) அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் இதை எப்படி அமைக்கலாம் எங்கு அமைக்ககூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிக்கும் தொட்டியோ, நிலத்தில் குடிநீர் சேகரிக்கும் ஷம்ப் அமைக்கும் போது வடகிழக்கு பகுதியில் அமைக்கலாம். அப்படி கட்டும்போது வீட்டின் தாய் சுவரையும் காம்பவுண்ட் சுவரையும் தொடாமல் கட்ட வேண்டும். தென்கிழக்கு, தென்மேற்கு வடமேற்கு மூலையிலோ, தெற்கு, மேற்கு பகுதியிலோ மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டக்கூடாது.
வாஸ்து படி சரியான திசை: வாழ்க்கையை வளமாக்க வாஸ்துபடி வீடு கட்டுவது அவசியம். சரியான அளவுகளில் வீடு கட்டினால் மட்டுமே அந்த வீட்டில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் எட்டு திசைகளையும் அஷ்ட திக் பாலகர்கள் ஆட்சி செய்கின்றனர். நாம் சரியான திசையில் கழிவுநீர் தொட்டி, மழைநீர் சேகரிப்பு தொட்டியை கட்டினால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாகவும் செல்வ வளத்தோடும் வாழ முடியும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications