சுடலை மாடன் கைலாயத்தில் இருந்து பூமிக்கு வந்த ரகசியம் தெரியுமா? சுடலையின் செயலால் அதிர்ந்த பார்வதி!
சென்னை: சுடலை மாடன் பூமிக்கு வந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? சுடலையின் தாய் தந்தை குறித்து அறிந்து கொள்ளுங்கள். இன்றும் பல கிராமங்களுக்கு காவல் தெய்வமாக இருக்கும் சுடலை மாடன், யார் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ஏவி தமிழ் ஸ்டோரி எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுடலைமாடன் பூமிக்கு வந்த ரகசியம் தெரியுமா? பார்வதி வனப்பேச்சியாக காடுகளில் அலைந்து சிவனிடம் ஒரு மகன் வேண்டி கடும் தவம் இருந்தார். சிவன் தோன்றி, மயானத்தில் பிணம் நன்றாக எரியும் போது முந்தானையை ஏந்தினால் வேண்டும் மகன் கிடைப்பான் என்றார்.

உடனே பார்வதி வேண்டிவாறே முந்தானையை விரிக்க சுடலை முத்துகள் விழுந்து அது குழந்தையாகிறது. அந்த குழந்தைக்கு சுடலை என பெயரிட்டு கைலாயத்திற்கு திரும்பினார்.
பிணம் எரியும் வாடை
நள்ளிரவில் பிணம் எரியும் வாசனையை அறிந்த சுடலை, சுடுகாட்டுக்கு வந்து பிணத்தை தின்று பேய்களுடன் விளையாடிவிட்டு அதிகாலையில் கைலாயம் வந்து படுத்தார்.
சுடலையை தூக்கிய போது
காலையில் பார்வதி, சுடலையை தூக்கிய போது அவர் மீது பிண வாடை வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்து சிவனிடம் போய் நடந்தவற்றை கூறினார். பிணம் தின்ற இவன் இனி கைலாயத்தில் இருக்க முடியாது என கூறிய சிவன், சுடுகாட்டில் பேய்களை ஆளவும் தீய சக்திகளை அழிக்கவும் வரம் கொடுத்து சுடலையை பூமிக்கு அனுப்பி வைத்தார்.
சுடலை மாடன் மயான வேட்டை
சுடலை மாடன் கன்னியாகுமரி பகவதி அம்மனை தாயாக ஏற்று செவ்வாய், வெள்ளியில் மயான வேட்டையிலும் மற்ற நாட்களில் புதையலுக்கு காவலுக்கும் இருந்தார். ஒரு நாள் சுடலை இல்லாத போது மந்திரவாதி ஒருவர் புதையலை திருடினான்.
புதையலை மீட்ட சுடலை
சுடலை மாடன் அவனை வீழ்த்தி புதையலை மீட்டார். இதை அறிந்த மக்கள் அவரை காவல் தெய்வமாக போற்றி கோயிலில் வழிபாடு நடத்த தொடங்கினர். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுடலை மாடனை தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வழிபடுகிறார்கள்.
குலதெய்வம்
பலருக்கு சுடலை மாடன் குலதெய்வமாகவும் இருக்கிறார். இவர் பெரிய மீசையுடன் வலது கையில் அரிவாள், இடது கையில் கம்பு வைத்திருக்கிறார். இவரது வாகனம் மாடு. இன்றும் இரவு நேரங்களில் சுடலை வேட்டைக்கு செல்வதாக சொல்லப்படுகிறது. பல கிராமங்களுக்கு கிராமத் தெய்வமாகவும் இருக்கிறார்.
சுடலையின் பெயர்கள்
இவர் சீவலப்பெரியான் மாடன், சுடலேஸ்வரன், பத்மாபரம் ஈஸ்வரன், மயாண்டீஸ்வரன், சிவனைந்த பெருமாள், சுடலையாண்டி, மாயாண்டி, சுடலை முத்து, வெள்ளைப் பாண்டி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவருடைய கோயில்களுக்கு கூரை வேயப்படுவதில்லை.
கருவறை இல்லை
இவருக்கென தனியாக கருவறை எல்லாம் கிடையாது. இவரை தொட்டு வணங்கலாம். ஆண்டுதோறும் இவருக்கு ஆடு, பன்றி, சேவல்களை பலியிட்டு அசைவ உணவு படைக்கும் வழக்கம் உள்ளது. இன்றும் சுடலை சுடுகாட்டில் வேட்டைக்கு சென்றுவிட்டு திரும்பும் நிகழ்வு நடக்கிறது. இதில் சாமியாடிகள் விரதமிருந்து பய பக்தியுடன் சுடுகாட்டுக்கு சென்று எலும்புகளை கடித்தபடியே வேட்டையை முடித்து விட்டு திரும்புவர்.
இரவு நேரங்களில் மாடு வாகனம்
சுடலைமாடன் வரலாற்றை பொருத்தமட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள். இதில் எது உண்மையான கதை என தெரியவில்லை. இரவு நேரங்களில் மாடு வாகனத்தில் சுடலை வேட்டைக்கு கிளம்பும் சப்தம் கேட்பதாக கிராம மக்கள் சொல்வதுண்டு.












Click it and Unblock the Notifications