Archana: திருவண்ணாமலையில் மலை ஏறிய அர்ச்சனாவுக்கு வந்த வினை! இப்போது உருக்கமாக வெளியிட்ட பதிவு!
சென்னை: நடிகையும் பிக்பாஸ் தமிழ் சீசன் வெற்றியாளருமான அர்ச்சனா ரவிச்சந்திரன், சமீபத்தில் திருவண்ணாமலையில் மலை ஏறிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், அதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட விளக்க பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சமூக ஊடகங்களில் கவனம் பெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் உள்ள மலைப்பகுதியில் தடையை மீறி மலை ஏறிய அர்ச்சனாவின் வீடியோ, சிலரிடம் பாராட்டையும், சிலரிடம் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக பாதுகாப்பு விதிகள், வனத்துறை கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணம் ஏற்படுத்தும் செயலா என்ற கோணங்களில் விவாதங்கள் எழுந்தன.

இந்த சூழலில், தனது செயலைப் பற்றி அர்ச்சனா வெளியிட்டுள்ள பதிவில், அந்த மலை ஏற்ற அனுபவம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான உள் பயணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். முதல் முறையாக ஒரு மலை உச்சியை அடைவதற்கான முயற்சி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை சவாலுக்குள்ளாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
ஏற்றத்தின் போது இருந்த உற்சாகமும், உச்சியை அடைந்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சியும், இறங்கும் போது ஏற்பட்ட பயமும் தன்னை தன்னையே நேரடியாக எதிர்கொள்ள வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் சில நாட்களாக வைரலான நிலையில் இது பற்றி முதல் முறையாக அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் தன்னால் செய்யப்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் .
மலைப்பகுதியின் சில இடங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என்பதை முன்கூட்டியே சரியாக அறிந்து கொள்ளவில்லை என்றும், வெளிப்படையான இது தடை செய்யப்பட்டது என்று தெரியாததும், மற்றவர்கள் சென்று கொண்டிருந்ததையும் பார்த்து அந்த பகுதி அனுமதிக்கப்பட்டது என்று தவறாக கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தவறு முழுக்க முழுக்க தன்னுடைய பொறுப்பற்ற கவனக்குறைவு தான் என்றும், அதை மறைக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ விரும்பவில்லை என்றும் அர்ச்சனா தெரிவித்துள்ளார். துணிச்சல் என்பது எல்லையில்லாதது அல்ல என்றும், ஒவ்வொரு துணிச்சலுக்கும் ஒரு கட்டுப்பாடும், ஒரு பொறுப்பும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வனத்துறை விதிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசின் மீது மட்டுமல்ல, பொதுமக்கள் ஒவ்வொருவரின் மீதும் இருப்பதாகவும், அந்த விதிகளை மதிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் உணர்ந்து கொண்டதாகவும் சொல்லி இரக்கிறார். இந்த விவகாரத்தில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகளாக தன்னால் செய்ய வேண்டியதை செய்ததாகவும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவம் தன்னை உடைக்கவில்லை, மாறாக தன்னை மேலும் வலிமையானவராக மாற்றியுள்ளதாகவும், ஒவ்வொரு இலக்கையும் நோக்கி செல்லும் முன் அதற்கான பாதையை தெளிவாக அறிந்து கொண்டு, தயாராக செல்ல வேண்டும் என்பதே தன்னுடைய இந்த அனுபவம் சொல்லித்தந்த முக்கியமான பாடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயர்ந்த இலக்குகளை நோக்கி செல்லும் அனைவருக்கும் ஒரு செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார். எந்த இலக்கையும் அடைவதற்கு முன் சரியான திட்டமிடல், விதிகளை மதித்தல், பாதுகாப்பை முதன்மைப்படுத்தல் ஆகியவை அவசியம் என்றும், அமைதியான தருணங்களே வாழ்க்கையின் முக்கியமான பாடங்களை கற்றுத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்ச்சனாவின் இந்த பதிவு, விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் ஒரு விளக்கம் மட்டுமல்லாமல், தனது தவறை ஒப்புக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை வெளிப்படையாக பகிரும் ஒரு பொறுப்பான அணுகுமுறையாகவும் பலரால் பார்க்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் கவனம் பெறும் பொது மனிதர்கள், தங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியத்தை இந்த பதிவு நினைவூட்டுகிறது என்ற கருத்துகளும் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications