மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்து சர்ச்சை! மௌனம் கலைத்த முதல் மனைவி ஸ்ருதியின் முதல் பதிவு!
சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் இரண்டாவது திருமணம் மற்றும் கர்ப்பிணியான இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா உடனான பிரிவு விவகாரம், பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி ரங்கராஜ், இதுவரை இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்து வந்த நிலையில், தற்போது ஒரு இன்ஸ்டா ஸ்டோரி (Cryptic Post) வெளியிட்டுள்ளார். இதுவே, அவர் இந்தச் சர்ச்சை குறித்துப் பகிரங்கமாக வெளியிட்ட முதல் பதிவு என்பதால், சமூக ஊடகங்களில் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

காவல்துறையின் விசாரணை
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே, ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் ஆரம்பத்தில் இருந்தே பலத்த விவாதங்களைக் கிளப்பியது. இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா கர்ப்பமான சில காலத்திலேயே, ரங்கராஜ் அவரைவிட்டு விலக ஆரம்பித்தார் எனச் சொல்லப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜாய் கிரிஸில்டாவிடம் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கூடிய விரைவில் மாதம்பட்டி ரங்கராஜிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
ஜாய் கிரிஸில்டாவின் அதிர்ச்சி வாக்குமூலம்
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜாய் கிரிஸில்டா அளித்த ஒரு பேட்டி, இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதில் அவர், "இந்த இரண்டாவது கல்யாணம் திருட்டுக் கல்யாணம் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. ஒருநாள் ரங்கராஜ் என்னிடம் வந்து, 'நான் எல்லாம் அவளிடம் (ஸ்ருதியிடம்) சொல்லிட்டேன். அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை' எனக் கூறினார். இதனால், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதிக்கு எல்லாமே தெரியும்" என்று ஜாய் கிரிஸில்டா பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
ஜாய் கிரிஸில்டாவின் இந்த வாக்குமூலம், முதல் மனைவிக்கு எல்லாம் தெரிந்தேதான் இரண்டாவது திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மௌனம் கலைத்த ஸ்ருதி
ஜாய் கிரிஸில்டாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் விவாகரத்து விவகாரத்தின் உச்சக்கட்டச் சர்ச்சைக்கும் மத்தியில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி ரங்கராஜ், தனது சமூக ஊடகப் பக்கத்தில் (Instagram Story) முதல்முறையாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், சூஃபி ஞானி ஷம்ஸ் தப்ரிஜியின் (Shams Tabrizi) மேற்கோள் இடம்பெற்றுள்ளது. அவர் குறிப்பிட்டிருந்த ஆங்கில வரிகளின் தமிழாக்கம் இதுதான்:
"நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாவிகள்தான். நாம் நமக்கு வசதியான பாவங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்; நமக்கு வசதி இல்லாத பாவங்களைச் செய்யும் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறோம்." ("All of us are selective sinners. We choose the sins we are comfortable with, and judge others that commit the ones we're not comfortable with.")
உணர்ச்சிப்பூர்வமான பதிவின் பின்னணி
இதுவரை கணவர் மீதான புகார் குறித்தோ, ஜாய் கிரிஸில்டா குறித்தோ எந்த ஒரு தனிப்பட்ட கருத்தையும் வெளியிடாமல், அமைதி காத்து வந்த ஸ்ருதியின் இந்த முதல் பதிவு, உணர்ச்சிப்பூர்வமான முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பதிவானது, "நான் சம்மதம் கொடுத்தேனா இல்லையா என்று தெரியாமல், வெளியுலகம் பேசுகிறது. நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் சில தவறுகளைச் செய்கிறோம். ஆனால், நமக்கு ஏற்புடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு, பிறர் செய்யும் தவறுகளை மட்டும் கண்டிப்பது ஏன்?" என்று பொதுச் சமூகத்தைப் பார்த்துக் கேட்கும் ஒரு கூர்மையான கேள்வியாக இருக்கலாம் என்று விவாதங்கள் வருகிறது. இந்தச் சர்ச்சைக்குரிய விவகாரத்தில், ஸ்ருதி தன்னைப் பற்றியோ, தனது கணவர் பற்றியோ நேரடியாகப் பேசாமல், பொதுவான மனித இயல்பை விமர்சனம் செய்திருப்பது, இந்தச் சிக்கலான குடும்பப் பிரச்சினையில் உள்ள உண்மை எது? என்ற புதிய மர்ம முடிச்சையும் போட்டுள்ளது.












Click it and Unblock the Notifications