தற்கொலை பண்ணிக்கலாம்னு இருந்த மனோபாலா.. நடிகர் மோகன் அன்று செய்த மறக்க முடியாத உதவி
சென்னை: முதல் படம் சரியாக போகாத நிலையில், இரண்டு வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலா கையில் வெறும் 50 ரூபாயுடன் தவித்த போது, நடிகர் மோகன் அவருக்கு இயக்குனராக வாய்ப்பு கொடுத்தார். அப்போது புகழ் பெற்ற நடிகராக இருந்த மோகன், மனோபாலாவை வைத்து இயக்கினால் கால்ஷீட் தருவதாக கூறி வாய்ப்பு பெற்றுக்கொடுத்தார்.
இதனை ஒருமுறை தனது பேட்டி ஒன்றில் மனோபாலாவே கூறியிருக்கிறார். தன் வாழ்க்கையில் நண்பர் மோகனை மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்.
இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலாமனார். அவரது மரணம் திரையுலகினரை வெகுவாக பாதித்துள்ளது. தமிழ் திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மனோபாலா இயக்குனராக தன்னை நிலைநிறுத்த போராடிய ஆரம்ப காலக்கட்டத்தில் அவருக்கு நடிகர் மோகன் தான் உதவினார். அதனை பேட்டி ஒன்றில் மனோபாலாவே கூறியிருக்கிறார்.

இது பற்றி நெகிழ்ச்சியுடன் மனோபாலா ஒரு முறை பேட்டியில் கூறுகையில், என்னுடைய முதல் படம் 'ஆகாய கங்கை' படத்தில் கார்த்திக்கும் சுஹாசினியும் நடித்திருந்தார்கள். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு எனக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. சான்ஸ் தேடி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் படமே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன்.
நடிகர் மோகன் எனக்கு நல்ல நண்பர். அடிக்கடி அவரை சந்திப்பேன். வாய்ப்பு கிடைக்காத நிலையை அவரிடம் அடிக்கடி எடுத்துசொல்லுவேன். அப்படித்தான் ஒருமுறை, மனம் நொந்துபோயிருந்த நான், மோகனிடம் சொல்லிப் புலம்பினேன். 'ஒரேயொரு சான்ஸ் கிடைச்சா, எங்கேயோ போயிருவேன்' என்று சொல்லி அழுதேன். சொல்லிவிட்டு, திருச்சிக்குச் சென்றுவிட்டேன்.
திருச்சியில் உறையூரில் உள்ள வெக்காளி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். சக்திவாய்ந்த தெய்வம் அவள். அம்மனிடம் என் மனக்குமுறலையெல்லாம் கொட்டித்தீர்த்தேன். அங்கே பிரார்த்தனைச் சீட்டு கட்டுவது பிரசித்தம். 'இயக்குநராக ஜெயிக்க வேண்டும்' என்று பிரார்த்தனைச் சீட்டு கட்டி, வேண்டிக் கொண்டேன்.

ஆனாலும் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போயிடலாம்னு அடிக்கடி நினைப்பு வந்துக்கிட்டே இருந்துச்சு. திருச்சிலேருந்து சென்னை வந்தப்ப, எங்கிட்ட ஒண்ணேகால் ரூபா இருந்துச்சு. பாண்டிபஜார்ல கையேந்திபவன் ஹோட்டல்ல ஒரு தோசை ஒரு ரூபா. நாலணாவை பாக்கெட்ல வைச்சிட்டு, ஒரு தோசையை வாங்கி அதுல நிறைய்ய்ய்ய சாம்பாரை ஊத்திச் சாப்பிட்டேன். அப்போ... 'டைரக்டரே...'னு ஒரு குரல். ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி, ஓடாத படத்தை எடுத்த நம்மளை யாருடா டைரக்டர்னு கூப்புடுறாங்கன்னு திரும்பிப் பாத்தேன். கலைமணி அண்ணன். 'இன்னும் சாப்பிடுய்யா'னு சொல்லி டிபன் வாங்கிக் கொடுத்தாரு. 'நான் படம் தயாரிக்கிறேன். நீதான் டைரக்ட் பண்றே. எல்லாம் அப்புறமா பேசிக்கலாம். இப்போதைக்கு இதை வைச்சுக்கோ'னு என் பாக்கெட்ல அம்பது ரூபாயைத் திணிச்சிட்டுப் போனாரு. அன்னிக்கி அவர் கூப்பிடலேன்னா, அந்தப் பட வாய்ப்பு வராம போயிருந்தா... நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிட்டு செத்திருப்பேன். அந்தப் படம்தான் பிள்ளைநிலா
மோகன்கிட்ட போனோம். அந்த காலகட்டத்துல மோகன் கால்ஷீட் கிடைக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அவ்வளவு சுலபமா கிடைச்சிடாது. காத்திருக்கணும். ஆனா, உடனே கால்ஷீட் தரேன்னு சொன்னார். பகலெல்லாம் நடிக்க ஏற்கெனவே கால்ஷீட் கொடுத்துட்டேன். அதனால தினமும் நைட்டு நடிச்சுக் கொடுக்கிறேன் என்று கூறினார்.
முழுக்க நைட்டுங்கிறதால, அதுக்குத் தகுந்த மாதிரி கதையை ரெடி பண்ணினார் கலைமணி சார். கிட்டத்தட்ட ஒரு இங்கிலீஷ் படம் மாதிரி பண்ணியிருந்தோம். மிகப்பெரிய ஹிட்டாச்சு. அந்தப் படம்... 'பிள்ளைநிலா'. இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்துச்சு. சரியான சமயத்துல, மோகன் கொடுத்த வாய்ப்பு அது. அதுக்குப் பிறகு, எனக்கு வரிசையாக படங்கள் இயக்கும் வாய்ப்புகள் வந்தன. நானும் பிஸியான இயக்குநரானேன். வெற்றிப்பட இயக்குநர் என்று ஒரு ரவுண்டு வந்தேன். அப்புறம் ஸ்டில்ஸ் ரவி தயாரிச்ச படத்தையும் மோகனை வைத்து இயக்கினேன். நண்பர் மோகனை என்னால் மறக்கவே முடியாது" இவ்வாறு மனோபாலா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications