Idli Kadai Box Office: இட்லி கடை வசூல் ஆறிப்போகுமா? தனுஷிற்க்கு காத்திருக்கும் சவால்! 3 நாள் நிலவரம்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம், அண்மையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக் காலத்தை இலக்காக வைத்து வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிட்ட இந்தத் திரைப்படம், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவானது.

'இட்லி கடை' திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அம்சத்தைக் கடந்து, ஆழமான ஒரு சமூகப் பிரச்சனையைத் தொட்டுப் பேசியதால், மக்களை வெகுவாகக் கவர்ந்தது. பல கோடி சம்பாதிக்க வேண்டி, குடும்பத்தையும் பெற்றோர்களையும் விட்டுவிட்டு வெளிநாடுகளில் தனிமையில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் இளைஞர்களையும், அதே சமயம் மகன்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, 'நம்மைப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லையே' எனத் தினமும் புழுங்கித் தவிக்கும் பெற்றோர்களையும் இந்தப் படம் வெகுவாகக் கனெக்ட் செய்துவிட்டது. ஒரு 'ஃபீல் குட்' படமாக மாறியதால், படத்தின் வசூல் குறையாமல் திரையரங்குகளில் நிலைத்து நிற்கிறது.
மூன்று நாள் வசூல் விவரம்
தமிழ் சினிமாவின் கிராமத்து மற்றும் குடும்பப் பாசப் படங்களை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதற்கு 'இட்லி கடை' படமும் ஒரு மிகப் பெரிய சாட்சியாக மாறியுள்ளது. தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், கீதா கைலாசம், இளவரசு எனப் திறமையான நடிகர்கள் பட்டாளம் இணைந்து நடித்த இந்த படம், அதன் வலுவான உணர்ச்சிகரமான கதைக்களத்தால் மக்களை ஈர்த்தது.
முதல் இரண்டு நாட்களும் பண்டிகைத் தினங்கள் என்பதால் படத்தின் வசூல் அமோகமாக இருந்தது.
முதல் நாள், (ஆயுத பூஜை)ரூ. 11 கோடி. நாள் 2 (விஜயதசமி) ரூ. 9.75 கோடி. நாள் 3 (வெள்ளிக்கிழமை) ரூ. 5.50 கோடி
மொத்தத்தில், மூன்று நாட்களில் மட்டும் 'இட்லி கடை' இந்தியாவில் ரூ. 26.25 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகச் சாக்னிக் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் இந்தப் படம் ரூ. 30 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
காந்தாரா அலை மற்றும் வார இறுதி சவால்
பண்டிகை முடிந்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், படத்தின் வசூல் பாதியாகக் குறைந்துவிட்டது. ஆனால், 'இட்லி கடை'க்கு இருக்கும் இப்போதைய மிகப்பெரிய சவால், திரையரங்குகளில் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் அலைதான். காந்தாரா படத்தின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் வரத் தொடங்கியுள்ள நிலையில், பல திரையரங்குகளில் அதன் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 'இட்லி கடை'யின் வசூல் மீண்டும் தலா 10 கோடி அளவில் அதிகரித்தால் மட்டுமே, முதல் வார முடிவில் இந்தப் படம் 50 கோடி வசூலையாவது எட்ட முடியும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
'குபேரா' போன்ற படங்களை விட தனுஷுக்கு இந்தப் படம் தமிழ்நாட்டில் நல்ல வசூல் என்றாலும், அவரது பிரம்மாண்ட படமான 'ராயன்' அளவுக்கு வசூல் வருவது சந்தேகம்தான் என்றும், இன்பன் உதயநிதிக்கு இது ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமையாது என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும், குடும்பப் பார்வையாளர்களின் தொடர் ஆதரவு, 'இட்லி கடை'யின் வசூலைக் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் 'இட்லி கடை' வசூல் மீண்டும் வேகம் எடுக்குமா? அல்லது 'காந்தாரா'வின் அலை அதை முடக்குமா? உங்கள் கணிப்பு என்ன?












Click it and Unblock the Notifications