Israel-Hamas War: குழந்தைகளின் கண்முன்னே.. நாகினி சீரியல் நடிகையின் சகோதரி மற்றும் கணவர் கொலை
சென்னை: இந்திய பிரபல மாடலும் சீரியல் நடிகையுமான நாகினி நடிகை மதுரா நாயக் இஸ்ரேல்-ஹமாஸ் போரால் தன் குடும்பத்தினரை இழந்த கொடூரத்தை குறித்து கண்ணீர் மல்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய சகோதரியும் அவருடைய கணவரும் குழந்தைகளின் கண் முன் கொல்லப்பட்ட துயர சம்பவத்தை பற்றி அவர் கூறியிருப்பதற்கு பலர் தங்கள் வருத்தத்தையும் ஆறுதல்களையும் கூறி வருகின்றனர்.

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவை தாக்கியதில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 3000 பேர் பலியாகி இருக்கின்றனர். இன்னும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றனர். இந்த நிலையில் சீரியல் நடிகையின் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு கொடூரமான முறையில் மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை இரு தரப்பினரும் மாறி மாறி தற்போது நடத்தி வருகின்றனர். இதில் பல பொது மக்களின் உயிர்களும் உடமைகளும் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது என பல ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பல நாட்டைச் சேர்ந்த மக்கள் இரு நாடுகளிலும் சிக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது குடும்பத்தினர் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தியை பிரபல சீரியல் நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் அவர் தனது இன்ஸ்டா பதிவில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் துவங்கிய ஆறாவது நாளான இன்று எனது சகோதரியும் அவரது கணவரும் அவர்களின் குழந்தைகளின் கண்முன்னே கொடூரமாக இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் தீவிரவாதிகள் பலவீனமானவர்கள் முதியவர்களையும் குழந்தைகளையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த யூதரான நாங்கள் இந்தியாவில் மொத்தமாக 3000 பேர் தான் இருக்கிறோம் தற்போது அதிலும் இருவரை இழந்து விட்டோம். இப்பொழுது எங்கள் குடும்பம் அடையும் துயரத்தையும் உணர்ச்சியையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.இஸ்ரேல் வேதனையில் இருக்கிறது ஹமாசஸின் கோபத்தில் தெருக்கள் தீக்களில் எரிகிறது என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இருதரப்பினரிடையே போர் துவங்கியதில் இருந்து வெளிவரும் பல காணொளிகளில் அப்பாவி பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகளையும், கணவர்களையும்,குடும்ப உறுப்பினர்களையும், தங்கள் பல வருடம் உழைத்து சேர்த்து வைத்த உடமைகளையும் இழந்து கதறுவது பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குவதாய் இருக்கிறது. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் பல துயர சம்பவங்கள் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள உலக நாடுகள் முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications