கேபிஒய் பாலா செய்த தரமான சம்பவம்.. நெகிழ்ந்த சென்னை மாற்றுத் திறனாளி மாணவர்கள்.. குவியும் பாராட்டு
சென்னை: சென்னையில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் காது கேளாதோருக்கான பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கு கேபிஒய் பாலா ஹியரிங் எய்ட் கருவி வழங்கி உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாணவர்களும் பாலா பாலா என்று சொல்லி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் பார்ப்போரை கண் கலங்கச் செய்யும் விதமாக அமைந்தது.
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் கேபிஒய் பாலா. முதலில் போட்டியாளராக வந்து விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த பாலா நாளடைவில் தனது திறமையின் மூலம் அதே சேனலில் தொகுப்பாளராகவும் களத்தில் இறங்கினார். பாலா இல்லாமல் நிகழ்ச்சியே இல்லை என்பதுபோல பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரைத் தொடர்ந்து வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு தான் சம்பாதிக்கும் பணத்தின் மூலமாக ஏழை மக்கள் பலருக்கும் இவர் உதவி செய்து வருகிறார். வாகன வசதி, அடிப்படை வசதி இல்லாத கிராமங்களுக்கு ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி தந்துள்ளார். ஆம்புலன்ஸை வாங்கித் தந்தது மட்டுமல்லாமல் அதற்கான பராமரிப்புச் செலவுகளையும் கவனித்து வருகிறார். லாரன்ஸ் மாஸ்டருடன் சேவை என்ற அமைப்பிலும் பாலா சேர்ந்துள்ள நிலையில் அதன் மூலமாகவும் ஏழை மக்கள் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார்.
ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி வரும் பாலாவின் சேவையை பலர் பாராட்டினாலும் சிலர் உதவி செய்வதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் பாலா பேட்டி ஒன்றில் பேசுகையில், நான் உதவி செய்வதை வீடியோவாக வெளியிடுவதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். நான் உதவி செய்வதன் மூலமாக ஒரு கல்லை எடுத்து வைக்கிறேன் என்றால் என்னைப் பார்த்து பலரும் பின் தொடர்வார்கள் என்பதால் தான் வீடியோவாக வெளியிடுகிறேன். நான் செய்யும் சிறிய சிறிய உதவிகளைப் பார்த்து பலரும் உதவ முன் வருகின்றனர்.
அண்மையில் கூட ஒரு கல்லூரியில் 20 லட்சம் ரூபாய் சீட்டை இலவசமாக ஒரு மாணவருக்கு வழங்கியிருக்கிறார்கள். எனக்கு அந்த சம்பவம் மிகவும் மகிழச்சியாக இருந்தது. அதேபோல, மாணவர் ஒருவருக்குத் தேவைப்படும் மருத்துவ செலவு குறித்து நான் வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்து பிரபலமான ஒரு மருத்துவமனையில் இருந்து அந்த மாணவருக்கு இலவசமாக மருத்துவம் பார்த்துள்ளார்கள். இதை எல்லாம் வெளியிடாமல் இருந்திருந்தால் இத்தனை பேருக்கு உதவி கிடைத்திருக்குமா. இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது கேபிஒய் பாலா தனது சொந்த செலவில் சென்னையில் உள்ள காது கேளாதோருக்கான லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு காது கேட்கும் கருவியை வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், சென்னை காது கேட்காத மாணவர்களுக்கு ஒலியாகவும், ஒளியாகவும் இருப்பது ஹியரிங் எய்ட்தான். அந்த மாணவர்களுக்கு செவித்திறன் கருவி முக்கியமான ஒன்று.
ஒரே நேரத்தில் 100 மாணவர்களுக்கு ஹியரிங் எய்ட் கருவியை கேபிஒய் பாலா வழங்கியுள்ளது எங்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல எண்ணத்துடன் மாணவர்களுக்கு இந்த உதவியை வழங்கிய பாலா சாருக்கு எங்களுடைய பள்ளியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications