பெப்சி உமா எனும் 90களின் பிராண்ட்! ரஜினிகாந்த் கன்வீன்ஸ் செய்தும் மசியாத டிவி சாம்ராஜ்ய பின்னணி
சென்னை: பெப்சி உமாவுக்கும் ரசிகர்கள் கோவில் கட்டுவதாக செய்திகள் அன்று கசிந்து, அது மிகப்பெரிய விமர்சனத்துக்கும் உள்ளானது.. இதுகுறித்து ஒரு நிருபரின் கேள்விக்கு, "நான் அந்த அளவிற்குத் தகுதியான நபர் கிடையாது. என்னைப்போன்ற நபர்களுக்குக் கோவில் கட்டினால் தமிழ்நாடு நாசமாகிவிடும் என்று விமர்சிப்பவர்களின் வார்த்தை உண்மையானதுதான்" என மிகவும் பக்குவமாக பதிலளித்தார் பெப்சி உமா" என்று தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு
Aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "90-களில் இளைஞர்களிடமும் பெண்களிடமும் ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கிய நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பெப்சி உங்கள் சாய்ஸ்" ஆகும்.

பட்டுப்புடவை, அழுத்தமான தமிழ் உச்சரிப்பு
அதன் தொகுப்பாளர் பெப்சி உமா பேசும் அந்த கனிவான, பணிவான குரலைக் கேட்பதற்கே இளைஞர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். அந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பு கிடைக்காமல் ஏமாற்றமடைந்தவர்களும் உண்டு; அழைப்பு கிடைத்துப் பேசியவர்களைப் பெரும் அதிர்ஷ்டசாலியாகப் பார்த்தவர்களும் உண்டு.
அன்றைய தினம் பெப்சி உமா என்ன வண்ணத்தில் பட்டுப்புடவை அணிந்து வருவார், அவருடைய பொட்டு, தோடு, வளையல்கள், செயின் எப்படி இருக்கும் எனப் பெண்கள் மத்தியில் அதுவே விவாதப் பொருளாக மாறியது.. டிவி தொகுப்பாளர்களின் ஆடை வடிவமைப்பு பற்றிப் பேசும் கலாச்சாரத்தை முதன்முதலில் தொடங்கி வைத்ததே பெப்சி உமாதான். அவருடைய உண்மையான பெயர் உமா மகேஸ்வரி என்றாலும், "பெப்சி உமா" என்ற பெயரே ஒரு தனி அடையாளமாக மாறியது.
ஃபெப்சி உமா
குஷ்பு போலவே பெப்சி உமாவுக்கும் ரசிகர்கள் கோவில் கட்டுவதாக செய்திகள் கசிந்து, அது மிகப்பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது.. இதுகுறித்து ஒரு நிருபரின் கேள்விக்கு, "நான் அந்த அளவிற்குத் தகுதியான நபர் கிடையாது. என்னைப்போன்ற நபர்களுக்குக் கோவில் கட்டினால் தமிழ்நாடு நாசமாகிவிடும் என்று விமர்சிப்பவர்களின் வார்த்தை உண்மையானதுதான்" என மிகவும் பக்குவமாக பதிலளித்தார்.
ஒரு டிவி நிகழ்ச்சி தொடர்ந்து 15 ஆண்டுகள் டிஆர்பி தரவரிசையில் உச்சத்தில் இருந்ததற்கு முழுமுதற் காரணம் தனிமனிதராக அவர் ஈர்த்த மக்கள் செல்வாக்கு மட்டுமே ஆகும்.
சூப்பர் ஸ்டார் கேட்டும் மறுப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது முத்து படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் நடிக்குமாறு நேரடியாக அழைத்தபோது, "எனக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை சார்" என்று மறுத்துவிட்டார். இன்னொரு படத்திற்காகவும் பெப்சி உமாவை அழைத்து, "அரை மணி நேரம் மட்டும் கொடுங்கள், உங்களை நான் சம்மதிக்க வைக்கிறேன்" என்று சொல்லி ஒரு மணி நேரம் பேசினாராம் ரஜினி. அப்போதும் அவரைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை.
கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' பட வாய்ப்பையும் அவர் மறுத்துவிட்டார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்திருந்ததால், தனது படத்தின் இயக்குனரை நேரடியாக சென்னைக்கு அனுப்பித் தனக்கு ஜோடியாக நடிக்க அழைப்பு விடுத்தார்.. அதையும் உமா நிராகரித்தார். கே.பாலசந்தர், மணிரத்தினம், பாரதிராஜா எனப் பல முன்னணி இயக்குனர்களின் வாய்ப்புகளையும் பெப்சி உமா மறுத்துள்ளார்.
இவ்வளவு திமிர் பிடித்தவளா?
இயக்குனர் பாலசந்தர், "நான் இவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேன்கிறாய், ரொம்ப திமிர் பிடித்தவளாக இருப்பாய் போல" என்று கூறியபோது கூட, "ஆர்வம் இல்லாத ஒரு தொழிலில் என்னால் எப்படி முழுமையாக ஈடுபட முடியும்? தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள் சார்" என்று மென்மையாக மறுத்தார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் நடிக்கும் ஒரு விளம்பரத்தில், புடவைக்கு மாற்றாக மாடர்ன் டிரஸ் அணிய வேண்டும் என்று கூறியதால் அந்தப் பெரிய வாய்ப்பையும் மறுத்துவிட்டார். கொள்கைகளில் அவர் மிகுந்த பிடிவாதமாக இருந்தார். அவர் மீது சில காதல் தொல்லைகளும், அரசியல் ரீதியான கிசுகிசுக்களும் பரவின.
கிசுகிசு தகவல்
ஒரு முன்னணி பத்திரிக்கையில் "குளிர்பானப் பெயரில் நிகழ்ச்சி நடத்தும் பெண்" என்று கிசுகிசு எழுதியபோது, நேரடியாகவே அந்த பத்திரிகை ஆபீசுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
"என்ன சார் இப்படி பொய்யான தகவலை எழுதியிருக்கீங்க? பெயரை சொல்லாவிட்டாலும், அது நான்தான் என்று அனைவருக்கும் தெரிந்துவிடுமே" என்று கேட்டுள்ளார். இருந்தாலும், அந்த பொய்ச்செய்தியை இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவருக்கு இருந்த ஒரே காதல் திருமணத்தில் முடிந்தது. இன்று அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது அவர் தனது கணவரின் வணிகத்தைக் கவனித்துக்கொண்டு சென்னையில்தான் வசித்து வருகிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications