பிரதமர் மோடி செயல்பாடு மீது 50% கேரள மக்கள் அதிருப்தி - டைம்ஸ்நவ்-சி வோட்டர் சர்வே
திருவனந்தபுரம்: பிரதமர் மோடியின் செயல்பாட்டில் 50.38% கேரளா மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்று டைம்ஸ்நவ் சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் செயல்பாட்டில் மிகவும் திருப்தி என்று 31.32% பேர் கூறியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் மும்முரமாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணி ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவும் இந்த முறை கணிசமான தொகுதிகளை பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது.
இந்த நிலையில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி 71 முதல் 83 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணி 56 முதல் 68 இடங்களை கைப்பற்றும் என்றும் டைம்ஸ்நவ் சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் இடதுசாரி கூட்டணி 83 இடங்கள் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே
பாஜகவுக்கு 16.4% வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாட்டில் 50.38% கேரளா மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றும் கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் செய்லபாடுகளில் 23.88% பேர் மிகவும் திருப்தி என்று கருத்து தெரிவித்துள்ளனர். 42.54% பேர் திருப்தி இல்லை என்றும், 32.58% பேர் ஓரளவு திருப்தி என்றும் கருத்து கூறவில்லை என்று 1% பேரும் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் செயல்பாட்டில் மிகவும் திருப்தி என்று 31.32% பேரும், ஓரளவு திருப்தி என்று 29.94% பேரும், திருப்தி இல்லை என்று 33.32% பேரும், கருத்து கூற விரும்பவில்லை என்று 5.42% பேரும் கூறியுள்ளனர்.