ஷாக்கிங்.. ஷவர்மாவுக்காக ஸ்டோர் ரூமில் இருந்த.. 500 கிலோ அழுகிய கோழிக்கறி.. கேரளாவில் அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் அழுகிய நிலையில் இருந்த சுமார் அரை டன் (500 கி.கி) கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இறைச்சி எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு ஷவர்மா மற்றும் கிரில் தயாரிக்க விநியோகிக்க இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டதில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இறைச்சி விற்பனை கடைகள், ஓட்டல்கள், ஓட்டல்களுக்கு இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் என எல்லா இடங்களிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
அதாவது காசர்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் அஞ்சு பார்வதி. இவர் புத்தாண்டை கொண்டாடும் விதமாக அன்று குடும்பத்தினர் அனைவருக்கும் சேர்ந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். ஒரு சாப்பாடு, இரண்டு குழிமந்தி பிரியாணி, சைட் டிஷ்கள் என பல உணவுகளை பார்வதி ஆர்டர் செய்திருக்கிறார். எதிர்பார்த்ததைப்போலவே உணவும் வந்திருக்கிறது.
பிரியாணி
இந்த உணவை வீட்டிலிருந்த பார்வதியின் தாயார் அம்பிகா, அவரது சகோதரர் ஸ்ரீகுமார், உறவினர்கள் ஸ்ரீநந்தா, அனுஸ்ரீ மற்றும் பார்வதி என 5 பேரும் சாப்பிட்டிருக்கிறார்கள். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இவர்கள் அனைவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. அசிடிட்டி பிரச்னையாக இருக்கும் என்று நினைத்து சோடா போன்றவற்றை அருந்தியிருக்கிறார்கள். ஆனால் அப்போதும் வயிற்று வலி குறையவில்லை. எனவே உடனடியாக காசர்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பார்வதி தவிர அனைவருக்கும் ஓரளவு உடல்நலம் தேறியுள்ளது.
உயிரிழப்பு
ஆனால் பார்வதிக்கு மட்டும் உடல் நலம் தொடர்ந்து மோசமடைந்துள்ளது. பின்னர் உறவினர்கள் பார்வதியை மங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கும் உடல் நலம் தேறாத நிலையில் பார்வதி கடந்த 7ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது கேரளா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டது. இந்நிலையில்தான் இறைச்சி குறித்து கடைகளில் முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பறிமுதல்
எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்களில் தொடர் சோதனையை மேற்கொண்டனர். ஆய்வில் பல ஓட்டல்களில் இருந்து காலாவதியான கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று எர்ணாகுளத்தின் களமசேரியில் உள்ள 'கைப்படமுகில்' எனும் இறைச்சிக் கடையில் சுமார் 500 கி.கி கெட்டுப்போன கோழி இறைச்சி பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடையிலிருந்துதான் எர்ணாகுளத்தில் உள்ள பல பிரபலமான ஓட்டல்களுக்கு கறி விநியோகிக்கப்படுகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள கோழி இறைச்சியானது தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது.
விசாரணை
சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்த இறைச்சி இங்கேயே தேக்கிவைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது சேமித்து வைக்க பாதுகாப்பான கொள்கலன்கள் ஏதும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. வெறுமெனே ஒரு பெரிய பிலாஸ்டிக் பையில் சுற்றி ஃப்ரிசரில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இறைச்சி பெரும்பாலும் ஷவர்மா செய்வதற்காகவும், கிரில் செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை பாலக்காட்டைச் சேர்ந்த ஜுனைத் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஒரே நாளில் சுமார் அரை டன் அளவு கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பேசுபொருளாகியுள்ளது.